யாரு இவரா வரிச்சியூர் செல்வம்.. கோர்ட்டில் ஆளே அடையாளம் தெரியலையே! "நிராயுதபாணியா" இருக்காரே!
விருதுநகர்: கூட்டாளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மதுரை வரிச்சியூர் செல்வம் ஒரு குண்டுமணி நகை கூட அணியாமல் இருப்பதை பார்ப்பதற்கு வேறு யாரோ போல் தெரிகிறது. நகைகளே இல்லாமல் மொட்டையாக இருப்பதற்கு பார்க்க ஒரு மாதிரி இருப்பதாக ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
மதுரையை சேர்ந்தவர் வரிச்சியூர் செல்வம். இவர் மீது காவல் நிலையத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது கூட்டாளியாக இருந்தவர் செந்தில். இவருக்கும் வரிச்சியூர் செல்வத்திற்கும் இடையே தகராறு எழுந்ததாக தெரிகிறது.

இதனால் செந்தில் தனது குடும்பத்தினரை அழைத்து கொண்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் குடியேறியுள்ளார். இந்த நிலையில் வரிச்சியூர் செல்வம் அழைப்பதாக செந்திலின் மனைவி மகாலட்சுமி போன் வந்துள்ளது.
இதை தனது கணவரிடம் மகாலட்சுமி கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து செந்தில் வரிச்சியூர் செல்வத்தை பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவே இல்லை. அதன் பின் செந்திலின் உடல்தான் கிடைத்தது. இந்த கொலை வழக்கின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் வரிச்சியூர் செல்வத்தை நேற்று கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து அவரை நேற்றைய தினம் விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை நீதிமன்றத்திற்கு போலீஸார் அழைத்து சென்ற போது அவரா வரிச்சியூர் செல்வம் என அடையாளம் கண்டுபிடிக்க சற்று தாமதமானது. காரணம் அவர் உடம்பில் ஒரு குண்டு மணி தங்கம் கூட அவர் அணிந்திருக்கவில்லை.
அரிவாள், கத்தி, துப்பாக்கி, பட்டாகத்தி என சினிமாக்களில் பல ரவுடிகளை பார்த்திருப்போம். ஆனால் வரிச்சியூர் செல்வமோ அந்த வாழ்வில் இருந்து திருந்தி நல்வாழ்வு வாழ்ந்து வருவதாக ஏற்கெனவே கூறியிருந்தார். அதனால் அவரது அடையாளம் அவர் தலை முதல் பாதம் வரை அணிந்திருக்கும் அம்புட்டு நகைகள்தான்.
எப்போதுமே இரு கைகளின் பத்து விரல்களிலும் மோதிரங்கள், பிரேஸ்லெட், கழுத்து நிறைய தங்க சங்கிலிகள் அணிந்திருப்பார். அவர் அண்மையில் தன்னிடம் இருந்த சிறிய நகைகளை கொடுத்துவிட்டு இந்தியாவிலேயே யாரும் போடாத டிசைனாக 128 பவுனில் ஒரு பெரிய சங்கிலியை போட்டிருக்கிறார்.
அது போல் எம தர்மனின் வாகனம், மும்பை பங்கு சந்தையின் காளை உருவம் பதித்த தங்க சங்கிலியை அணிந்திருந்தார். அது போல் காதுக்கு நிறைய தோடுகள், கால்களில் தண்டை அணிந்திருந்தார். இது போல் தோடுகள், தண்டை அணிவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கிறார்.
அவர் ஒரு பேட்டியில் கூறிய போது கூட நான் எங்கு சென்றாலும் நகையுடன்தான் செல்வேன். இரவு தூங்கும் போது நகைகளை கழற்றி விட்டு மீண்டும் அணிந்து கொள்வேன். என்னிடம் கத்தியை காட்டி யாராவது மிரட்டி நகைகளை கேட்டால் கொடுத்துவிடுவேன் என்றார். அப்படி ஃபுல் நகையில் பார்த்துவிட்டு தற்போது கோர்ட்டில் செல்வத்தை பார்ப்பதற்கே என்னவோ போல் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் ஒருவரை கைது செய்தால் அவர்களிடம் இருக்கும் நகைகளை கழற்றி வைத்துவிட்டு வர போலீஸார் கூறுவர்.












Click it and Unblock the Notifications