ஏன் 20 நாட்களாக வெளியூரில் தலைமறைவு? ராஜேந்திர பாலாஜி ஜாமீன் மீதான விசாரணையில் நீதிபதி சரமாரி கேள்வி
விருதுநகர்: ரூ3.10 கோடி பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது ஏன் 20 நாட்கள் தலைமறைவாக இருந்தீர்கள் என ஶ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி புகார்கள் கூறப்பட்டது. அரசு பணிகளில் வேலைவாங்கி தருவதாக ரூ3.10 கோடி பணம் வசூலித்து ஏமாற்றினார் கே.டி.ராஜேந்திர பாலாஜி என்பது புகார்.

ராஜேந்திர பாலாஜி தலைமறைவு
இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 17-ந் தேதி முதல் ராஜேந்திர பாலாஜி தப்பி ஓடி தலைமறைவானார்.

கர்நாடகாவில் கைது
ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் ஹாசன் நகரில் பதுங்கி இருந்த ராஜேந்திர பாலாஜி நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருக்க உதவிய கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் ராமகிருஷ்ணன், நாகேஷன், அ.தி.மு.க நிர்வாகி பண்டியராஜன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு இன்று அதிகாலை விருதுநகர் கொண்டுவரப்பட்டனர். விருதுநகரில் விடிய விடிய ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது. ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரிடம் மதுரை சரக டிஐஜி காமினி, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

நீதிமன்றத்தில் ஆஜர்
இந்த விசாரணைக்குப் பின்னர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் ராஜேந்திர பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து ஶ்ரீவில்லிப்புத்தூர், மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 2 நீதிபதி பரம்வீர் முன்னிலையில் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் ஶ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஜாமீன் கேட்கப்பட்டது.
Recommended Video

20 நாட்களாக ஏன் தலைமறைவு?
மேலும், ராஜேந்திரபாலாஜியை கைது செய்வதற்கு விலக்கு கோரும் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. போலீசாரின் விசாரணைக்கு ராஜேந்திர பாலாஜி முழு ஒத்துழைப்பு தருவார்; ஆகையால் அவர் மீதான கைது நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் அவரது வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக நீதிபதி பரம்வீர், விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக இருந்தால் கடந்த 20 நாட்களாக ஏன் தலைமறைவாக இருந்தீர்கள்? என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பரம்வீர் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications