டார்ச்சர்.. விலகி ஓடிய மனைவி! மாணவர்களிடம் எல்லை மீறிய விருதுநகர் ராஜேஷ்! இதுல ஹெட் மாஸ்டர் வேற!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளஸ்-1 மாணவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். இதை அடுத்து அவர் விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் கல்வி நிலையங்களில் மாணவ மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி கிங்சிலிங் பள்ளியில் போலி என்சிசி முகாமில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக பெண்கள் விடுதியில் இணையதள இணைப்பை பழுது பார்க்க வந்த நபர் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு, மாணவியின் உடை குறித்து பேசிய கல்லூரி வார்டன் மாணவியை திட்டியதாக புகார் எழுந்தது.
பாலியல் தொல்லை சம்பவங்கள்:
இதேபோல வால்பாறை அரசு கல்லூரியில் தற்காலிக பேராசிரியர்கள், ஆய்வு கூட உதவியாளர், என்சிசி பயிற்சியாளர் தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவிகள் கூறியிருந்தனர். இந்த அதிர்ச்சி ஓய்வதற்குள் நேற்று திருச்செந்தூர் பள்ளியில் மாணவிகளை விளையாட்டு போட்டிக்கு அழைத்துச் சென்று அவர்களை மது குடிக்க வைத்ததோடு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் பென்சிங் கைது செய்யப்பட்டார்.
கல்வி நிலையங்களில் அதிர்ச்சி:
மேலும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக பள்ளியின் முதல்வரும், செயலாளரும் கைது செய்யப்பட்டனர். இதை அடுத்து பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறையும் தமிழக அரசும் எச்சரித்து இருந்தது. ஆனாலும் இது போன்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை. அப்படி ஒரு சம்பவம் தான் விருதுநகரில் நடந்திருக்கிறது.
மாணவனுக்கு பாலியல் தொல்லை:
ஸ்ரீவில்லிபுத்தூரில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். ராஜபாளையம் பிஎஸ்கே பார்க் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கிருஷ்ணகிரி அட்டப்பாலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வந்தார். கடந்த ஜூலை மாதம் பணியிட மாறுதல் பெற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார்.
பாலியல் தொல்லை:
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முனனிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்களுக்கு கேக் கொடுத்துள்ளார். மேலும் அருகே இருந்த மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் கேக் கொடுத்துள்ளார். விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டாம் தேதி தலைமை ஆசிரியர் ராஜேஷுக்கு மாணவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர். அப்போது இரண்டு பிளஸ் ஒன் மாணவர்களுக்கு ஆசிரியர் ராஜேஷ் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
தலைமை ஆசிரியர் கைது:
இது தொடர்பாக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாணவர்கள் புகார் அளித்தனர். மேலும் இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராஜேஷ் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ராஜேஷைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அவரை ஜனவரி 21ஆம் தேதி வரை காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications