பொன்னமராவதி விவகாரம்... 500 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்... விருதுநகர் அருகே பரபரப்பு
விருதுநகர்: பொன்னமராவதி விவகாரம் தொடர்பாக, விருதுநகர் அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் 500-க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் உள்ள ஒரு சமூகத்தினரை பற்றி தவறாக சித்தரித்தும், அந்த சமூக பெண்கள் பற்றி தரக்குறைவாக பேசியும் வாட்ஸ் அப்பில் ஒரு ஆடியோ வைரலானது. இதனால், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பொன்னமராவதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அவதூறு பரப்பியவர்களை கைது செய்யவில்லை எனக்கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் காவல் நிலையம் மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது சரமாரி கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால், 3 போலீசார் காயமடைந்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டதால் தடியடி சம்பவம் நடைபெற்றது.
மேலும், புதுக்கோட்டையின் பல்வேறு கிராமங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கலவரம் பரவியதால், போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே, குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் புகைப்படத்தை பரப்பிய தஞ்சை மாவட்டம் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த குகன் என்பவரை கைது செய்தனர்.
அவரை பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், கீரனூரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரையும் தேடி வருகின்றனர். அதே நேரம், வாட்ஸ் அப் நிறுவனத்திற்கும் போலீசார் கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தநிலையில், அவதூறு ஆடியோவை வெளியிட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி, விருதுநகர் மாவட்டம் ஆத்திப்பட்டியில் 500 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை கூட்டத்தை கலைத்தனர். இருப்பினும், போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications