'விருதுநகர் தொகுதியை விட்டுக்கொடுக்க தயார்'.. மோடி, அமித்ஷாவிற்கு மாணிக்கம் தாகூர் சவால்
விருதுநகர்: "2023 மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தில் உறுதியளித்தபடி, இந்தியாவின் 543 தொகுதிகளிலும் 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால், எனது விருதுநகர் தொகுதியை ஒரு சகோதரிக்காக விட்டுக்கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால், மோடியும் ஷாவும் தங்களது வாரணாசி மற்றும் காந்திநகர் தொகுதிகளை விட்டுக்கொடுக்க ஏன் தயாராக இல்லை? இந்தத் தயக்கம் எதற்காக? அதற்குப் பதிலாக, புதிய தொகுதிகளை உருவாக்குவது பற்றிப் பேசுகிறார்கள்" என்று விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
மாணிக்கம் தாகூர் எம்பி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில்," "2023 மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தில் உறுதியளித்தபடி, இந்தியாவின் 543 தொகுதிகளிலும் 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால், எனது விருதுநகர் தொகுதியை ஒரு சகோதரிக்காக விட்டுக்கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்.

ஆனால், மோடியும் ஷாவும் தங்களது வாரணாசி மற்றும் காந்திநகர் தொகுதிகளை விட்டுக்கொடுக்க ஏன் தயாராக இல்லை? இந்தத் தயக்கம் எதற்காக? அதற்குப் பதிலாக, புதிய தொகுதிகளை உருவாக்குவது பற்றிப் பேசுகிறார்கள்-இதன் மூலம் உண்மையான சமூக மாற்றத்தைத் தவிர்க்கப் பார்க்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பது வெறும் அடையாளத்திற்காகவோ அல்லது ஒரு சில இடங்களுக்கானதாகவோ இருக்கக் கூடாது. அது நேர்மையானதாகவும், உடனடியானதாகவும், தற்போதுள்ள தொகுதிகளிலேயே அமல்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகவும் இருக்க வேண்டும். தொகுதி மறுவரையறை அல்லது திசைதிருப்பும் யுக்திகள் மூலம் அதைத் தாமதப்படுத்தக் கூடாது. இந்தப் போராட்டம் மிகவும் எளிமையானது: இது உண்மையான பிரதிநிதித்துவத்திற்கும், அரசியல் சுயநலத்திற்கும் இடையிலானப் போராட்டம்." இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
மாணிக்கம் தாகூர் இப்படி கூறுவதன் பின்னணி
2023-ல் மத்திய அரசு கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தின்படி, இந்த இடஒதுக்கீடு உடனடியாக அமலுக்கு வராது. 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை முடிந்த பிறகுதான் அமலாகும் என மத்திய அரசால் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை இப்போதே இருக்கும் தொகுதிகளில் (543 இடங்கள்) 33% இடங்களை பெண்களுக்கு ஒதுக்கலாமே? ஏன் 2029 அல்லது 2034 வரை காத்திருக்க வேண்டும்?" என்பதுதான் கேள்வியாக உள்ளது.
புதிய தொகுதிகளை உருவாக்கினால் தான் இடஒதுக்கீடு தருவோம் என்பது தென் மாநிலங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்குத் தொகுதிகள் குறையலாம் அல்லது வட மாநிலங்களுக்குத் தொகுதிகள் அதிகரிக்கலாம். இதைத் தவிர்க்க, "இருக்கும் தொகுதிகளிலேயே ஒதுக்கீடு கொடு" என்று திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அழுத்தம் கொடுக்கிறார்கள்.
இந்த நிலையில் மாணிக்கம் தாகூர், "நான் எனது தொகுதியை (விருதுநகர்) ஒரு பெண்ணுக்காக விட்டுக் கொடுக்கத் தயார்" என்று கூறுவதன் மூலம், தான் ஒரு முற்போக்கான தலைவர் என்பதைக் காட்டிக்கொள்கிறார். அதே சமயம், பிரதமர் மோடி (வாரணாசி) மற்றும் அமித் ஷா (காந்திநகர்) ஆகியோரை நோக்கி அதே கேள்வியைக் கேட்பதன் மூலம், அவர்கள் பெண்களுக்காகத் தங்கள் பாதுகாப்பான தொகுதிகளை விட்டுக் கொடுக்கத் தயாரா? எனச் சவால் விடுத்துள்ளார்.
மத்திய அரசு வெறும் 'அடையாளத்திற்காக'மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை சட்டத்தைக் கொண்டு வந்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. உண்மையான சமூக மாற்றம் வேண்டுமென்றால், ஓபிசி பெண்களுக்கான உள் இடஒதுக்கீடும் இதில் இருக்க வேண்டும் என்பதும் இவர்களின் ஒரு முக்கிய கோரிக்கையாக உள்ளது.இந்த கோரிக்கைக்காகவே அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி (SP) மற்றும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) ஆகிய கட்சிகள் இந்தச் சட்டத்தை எதிர்த்தன. அதில் திருத்தங்கள் கோரின. ஒருவேளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருந்தால், நடைமுறைக்கு நிச்சயம் வந்திருக்கும்.














Click it and Unblock the Notifications