சாத்தூர்: மாணவிகளிடம் இரட்டை அர்த்தங்களில் ஆசிரியரின் ஆபாச பேச்சு- பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்!
விருதுநகர் : சாத்தூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவிகளிடம் கணித ஆசிரியர், இரட்டை அர்த்தங்களில் தகாத வார்த்தைகளால் பேசியதாக குற்றம்சாட்டி, பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் அரசுப் பள்ளியை முற்றுகையிட்டதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கி வந்த தனியார் பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக, நீதிகேட்டு நடத்தப்பட்ட போராட்டம் மற்றும் வன்முறை, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் பதற்றம் இன்னும் தணியாத நிலையில், சாத்தூர் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகளிடம், கணித ஆசிரியர், இரட்டை அர்த்தங்களில் தகாத வார்த்தைகளால் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே புதுச்சூரங்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைபள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு புதுச்சூரங்குடி, நடுச் சூரங்குடி, ஸ்ரீரங்கபுரம் பத்துவார்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 270 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியில் 16 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளியில் பணிபுரியும் கணித ஆசிரியர் தாமோதரன் என்பவர், பத்தாம் வகுப்பு மாணவிகளிடம் இரட்டை அர்த்தங்களில் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர், பள்ளி முன்பு கூடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவலின்பேரில், அரசு பள்ளியில், சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் மற்றும் காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டி தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்தப் பிரச்சனை தொடர்பாக விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரி மற்றும் கல்வி அதிகாரிகள், மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர். மாணவிகளிடம் முதன்மை கல்வி அலுவலர் ஞான கெளரி தனியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
பள்ளி மாணவிகளிடம் தவறான முறையில் நடந்துகொண்ட கணித ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications