"ஒழுங்கா இருக்கணும்.. வேறு மாதிரி ஆயிடும்" விருதுநகரில் போராடிய மக்களை மிரட்டிய எஸ்பி கண்ணன்!
விருதுநகர்: பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் நிவாரண தொகை கேட்டு போராடியவர்களை பார்த்து, மாவட்ட எஸ்பி கண்ணன் மிரட்டும் தொனியில் பேசி இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. "ஒழுங்க இருக்கணும்.. கோஷம் எழுப்பினா வேற மாதிரி ஆயிடும்" என்று மாவட்ட எஸ்பி கண்ணன் பேசியதால், ஆவேசமான பொதுமக்கள் எங்களை சுட்டுக் கொல்லுங்கள் என்று கோஷம் எழுப்பினர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில், கமல்குமார் என்பவருக்கு சொந்தமான, 'கோகுலேஷ்' பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் 40க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. நேற்று தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த போது, காலை 8:45 மணியளவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகே இருந்த எட்டு அறைகள் இடிந்து தரைமட்டமாகின.

8 பேர் பலி, 5 பேர் காயம்
இந்த விபத்தில் சிக்கி மகாலிங்கம், வைரமணி, லட்சுமி, ராமஜெயம், ராமமூர்த்தி, செல்லப்பாண்டி, நாகப்பாண்டி, புண்ணியமூர்த்தி உள்ளிட்ட 8 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். அதேபோல் லிங்கசாமி, கருப்பசாமி, மணிகண்டன், முருகலட்சுமி உள்ளிட்ட 5 பேர் காயம் அடைந்து சிகிச்சையில் இருக்கின்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ரவி என்பவரை கைது செய்துள்ளான்ர்.
நிவாரணத் தொகையை உயர்த்துக
அதேபோல் ஆலை உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பட்டாசு ஆலை விபத்தில் சிக்கியவர்களின் உடல்களை பெற்று கொள்ளாமல், உறவினர்கள் மற்றும் சிஐடியூ சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராடிய உறவினர்கள்
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் ஆலை உரிமையாளர்களிடம் இருந்து பெற்று கொடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இந்த விவகாரம் பெரிதாக மாறிய நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட எஸ்பி கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மிரட்டிய எஸ்பி கண்ணன்
ஆனாலும் போராட்டத்தில் இருந்து யாரும் பின்வாங்கவில்லை. அப்போது மாவட்ட எஸ்பி கண்ணன் மைக்கில், ஒழுங்கா இருக்கணும்.. கோஷம் போட்டா வேற மாதிரி ஆயிடும் என்று பொதுமக்களை மிரட்டும் தொனியில் பேசினார். இதனை பார்த்த பொதுமக்கள், எங்களை சுட்டுக் கொல்லுங்கள் என்று ஆவேசம் அடைந்தனர்.
போலீஸ் அத்துமீறல்
அஜித் குமார் லாக் அப் மரணத்திற்கு பின் போலீசார் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறி இருந்தார். இந்த நிலையில் அடுத்த சில மணி நேரங்களிலேயே பொதுமக்களை மிரட்டும் தொனியில் விருதுநகர் மாவட்ட எஸ்பி கண்ணன் பேசி இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications