நிர்மலா தேவிக்கு இன்று தண்டனை அறிவிப்பு.. அரசு வக்கீல் சொன்ன முக்கிய பாய்ண்ட்.. கவனித்தீர்களா?
விருதுநகர்: கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறாக வழிநடத்திய வழக்கில், அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. தண்டனை விவரங்களை இன்று அறிவிப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி காவியன் நகரைச் சேர்ந்தவர் சரவணபாண்டியன் என்பவருடைய மனைவி நிர்மலா தேவி (வயது 54). நிர்மலா தேவி அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணித உதவி பேராசிரியையாக பணியாற்றினார். இவர் தன்னிடம் படிக்கும் சில மாணவிகளிடம் செல்போனில் பேசி, நான் சொல்லும் சில வழிமுறைகளை கேட்டால் உங்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று கூறியதுடன், மாணவிகளை பாலியல் ரீதியாக தவறாக வழிநடத்த முயற்சி செய்தார் என்று கடந்த 2018-ம் ஆண்டு புகார் எழுந்தது. இது தொடர்பான ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியானது.

அதையடுத்து, பேராசிரியை நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்தனர். அதன் பேரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து நிர்மலாதேவி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி அருப்புக்கோட்டை போலீஸ் நிலையத்தில் கல்லூரி செயலாளர் ராமசாமி புகார் அளித்தார். மேலும் நிர்மலாதேவி மீது மாணவிகள் 5 பேரும் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து நிர்மலாதேவியை கைது செய்தனர். மாணவிகளிடம் பாலியல் பேரம் வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவராக இருந்த கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா கோட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
ஜாமீனில் வெளியே வந்த நிர்மலாதேவி உள்பட 3 பேரும் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் ரகசிய வாக்குமூலங்கள் பெறப்பட்டன. அனைத்து விசாரணையும் முடிந்த நிலையில், இந்த வழக்கில் கடந்த 26-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி பகவதி அம்மாள் அறிவித்து இருந்தார்.
அதன்படி அன்றையதினம் முருகன், கருப்பசாமி ஆஜரானார்கள். ஆனால் நிர்மலாதேவி ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து தீர்ப்பை நேற்றைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிபதி ஒத்திவைத்து இருந்தார். நேற்று காலை 10 மணிக்கு முருகன், கருப்பசாமி, நீதிமன்றத்தில் ஆஜராகினர். தொடர்ந்து நிர்மலாதேவி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். மதியம் 1 மணி அளவில் நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பை வாசித்தார். அப்போது காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய 2 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்
பின்னர் அரசு வக்கீ்ல் சந்திரசேகரன், நிர்மலாதேவி தரப்பு வக்கீல் சுரேஷ் நெப்போலியன் ஆகியோர் வாதிட்டனர். வழக்கில் இருந்து நிர்மலாதேவியையும் விடுவிக்க வேண்டும் என அவரது தரப்பில் வாதிடப்பட்டது. அதே நேரத்தில் அரசு தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி என தீர்ப்பு அளித்தார். அவருக்கான தண்டனை விவரம் இன்று( ஏப்ரல் 30) மதியம் 2.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
நிர்மலாதேவி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் அவரை சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்தனர். தொடர்ந்து கோர்ட்டு நடைமுறைகளுக்கு பின்னர், நேற்று மாலையில் அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இன்று அவர் மீண்டும் சிறையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அழைத்துச்சென்று ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்புக்கு பின்னர், இவ்வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் சந்திரசேகரன் கூறும் போது, "பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில், முதல் குற்றவாளியான நிர்மலா தேவி மீது இந்திய தண்டனைச்சட்டம் 370 (1), 370 (3), 5 (1)ஏ, 9, 67 ஆகிய 5 பிரிவுகளின்படி குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வழக்கில் இருந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முருகன், கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அரசு சார்பில் மேல் முறையீடு செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்.
நிர்மலா தேவி தரப்பில் ஆஜரான வக்கீல், குற்றவாளிக்கு தண்டனையை குறைக்க வாய்ப்பு அளிக்கும்படியும், இந்த வழக்கில் மேலும் சில ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதால். ஒரு நாள் அவகாசம் வழங்கி தண்டனை விவர அறிவிப்பை நீதிபதி ஒத்திவைத்துள்ளார்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications