ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் அரிவாள் வீச்சு! ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய நீதிபதி!
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் அரிவாள் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தீர்ப்பு தனக்கு சாதகமாக வராததால், நீதிபதியை நோக்கி பாலமுருகன் என்பவர் அரிவாள் வீசியுள்ளார்.
அரிவாள் வீசிய பாலமுருகனை போலீசார் உடனடியாக கைது செய்துள்ளனர். நீதிபதியை நோக்கி அரிவாள் வீசப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்திருக்கிறார். தனது x பக்கத்தில் இது குறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது, "ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதி மீது அரிவாள் வீசப்பட்ட சம்பவம் ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளுக்கு எதிரான அதிர்ச்சி அளிக்கும் செயலாகும்.
தனக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதால், செங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் மேற்கொண்ட இந்தக் கொடூரத் தாக்குதல், சட்டத்தையும் நீதித்துறையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.
நீதிமன்றம் என்பது மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் புனித இடமாகும். அங்கு பணிபுரியும் நீதிபதிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். தீர்ப்பில் கருத்து வேறுபாடு இருந்தால், சட்டப்பூர்வமான மேல்முறையீட்டு வழிமுறைகள் உள்ளன; வன்முறை ஒருபோதும் தீர்வாகாது.
இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் நீதிமன்றங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வலியுறுத்துகிறேன்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications