பர்த்டேவை கிராண்டா கொண்டாட விடல.. தற்கொலை செய்துகொண்ட விருதுநகர் மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்!
விருதுநகர் : பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட பெற்றோர் மறுத்ததால் மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் புல்லலக்கோட்டை சாலை விக்னேஷ் காலனியை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ். இவர் விருதுநகரில் மருத்துவமனை மற்றும் மருந்தகம் நடத்தி வருகிறார். இவரது மகன் லோகேஷ் (21) ரஷ்யா அருகே உள்ள கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள ஜலாலாபாத் பல்கலைகழகத்தில் எம்.பி.பி.எஸ் 3ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் லோகேஷ் விடுமுறையில் விருதுநகருக்கு வந்து உள்ளார். இந்த நிலையில் லோகேஷ் தனது பிறந்த நாளான ஆகஸ்ட் 11ஆம் தேதி சிறப்பாக கொண்டாட வேண்டும் என விரும்பினாராம்.
அதற்கு லோகேஷின் பெற்றோர் எளிமையாக கொண்டாடுமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதனால் மனமுடைந்த லோகேஷ் நேற்று இரவு அதிகளவில் தூக்க மாத்திரையை விழுங்கி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து லோகேஷின் பெற்றோர் அவரை விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு லோகேஷுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.
இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லோகேஷ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவ மாணவர் தற்கொலை குறித்து அவரது தந்தை ஆனந்தராஜ் அளித்த தகவலின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications