விடக்கூடாது.. முதல்வர் போட்ட ஆர்டர்! விருதுநகர் வன்கொடுமை.. சிபிசிஐடியிடம் சிக்கும் இன்னும் "சிலர்"?
விருதுநகர்: விருதுநகரில் இளம்பெண் ஒருவர் 8 பேரால் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சிபிசிஐடி போலீசார் சந்தேகிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விருதுநகர் வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில் இதில் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி விட்டனர்.
பொதுவாக பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் அடிக்கடி விசாரணை நடத்துவதை தவிர்ப்பார்கள். மன ரீதியாக அந்த பெண்ணுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தலாம், traumaவை நினைவு படுத்தலாம் என்பதால் ஒரே விசாரணையில் முடிந்த அளவு அனைத்து விவரங்களையும் கேட்டு பெறுவார்கள்.

மீண்டும் விசாரணை
இந்த நிலையில்தான் விருதுநகர் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சிபிசிஐடி போலீசார் இரண்டாம் முறை விசாரணை நடத்தி உள்ளனர். அந்த பெண்ணிடம் இருந்து கூடுதல் ஆதாரங்கள் கிடைக்கலாம் என்பதால் அவரிடம் விசாரணை நடைபெற்று இருப்பதாக சிபிசிஐடி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விருதுநகர் மாவட்டத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி இன்று நான்காவது நாளாக பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வன்புணர்வு
அந்த பெண்ணின் முன்னாள் காதலன் ஹரிஹரன் என்பவரிடம் சிபிசிஐடி போலீசார் தனியாக விசாரித்து உள்ளனர். அந்த பெண் ஹரிஹரனை பல மாதங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்த சமயங்களை வீடியோவாக எடுத்த ஹரிஹரன் அதை திமுகவில் உறுப்பினராக இருக்கும் ஜீனைத் அகமது என்பவரிடம் காண்பித்து உள்ளார். இதையடுத்து அந்த வீடியோவை மேலும் 4 பள்ளி மாணவர்களிடமும் ஹரிஹரன் காட்டி இருக்கிறார்.

8 பேர்
பின்னர் இந்த வீடியோவை வைத்து அந்த பெண்ணை பக்கத்து வீட்டு ஆண் உட்பட 8 பேர் மிரட்டி பல மாதங்கள் வன்புணர்வு செய்துள்ளனர். இதில் 8 பேர் கைதாகி உள்ள நிலையில் இதன் பின் இன்னும் சிலர் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 8க்கும் அதிகமான நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சிபிசிஐடி சந்தேகிப்பதால் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று முதல்நாள் அந்த பெண்ணிடம் 7 மணி நேரம் தனி இடத்தில் விசாரணை நடந்தது.

மீண்டும்
இதையடுத்து கூடுதல் விவரங்களை சேகரிக்க இன்றும் காலையில் இருந்து விசாரணை நடைபெறுகிறது. முன்னதாக அந்த 8 பேர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அவர்களின் போன், சமூக வலைத்தளங்கள் சோதனை செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் அந்த பெண்ணிடம் மேலும் விசாரணை செய்து வருகின்றனர். முன்னதாக டிஜிபி சைலேந்திர பாபுவிடம் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக முக்கிய உத்தரவு பிறப்பித்தார். அதில், விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் வேகமாக செயல்பட வேண்டும். நேரடியாகவும், மறைமுகமாகவும் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

ஸ்டாலின் கறார்
அனைத்து குற்றவாளிகளையும் உடனே கைது செய்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். மேலும் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசிய போது, பொள்ளாச்சி வழக்கு போல் விருதுநகர் வழக்கு இருக்காது. வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்குப்போல் இந்த வழக்கு இருக்காது. விருதுநகர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மிக வேகமாக முடிக்கப்பட்ட வழக்கு என்பதாக இந்த வழக்கு இருக்கும்.

கண்டிப்பு
60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும், என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் இந்த வழக்கில் கண்டிப்பு காட்டி வருகிறார். யாராக இருந்தாலும் விட கூடாது என்று உத்தரவிட்டு இருக்கிறார். இந்த நிலையில்தான் கைதான 8 பேரில் சிலரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி உத்தரவிட்டுள்ளது












Click it and Unblock the Notifications