அவ்வளவு டீப்பா லவ் பண்ணினோம்.. எனக்கு வேறு வழி தெரியல.. வீடியோ போட்ட விருதுநகர் மாணவர்.. விபரீத முடிவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் காதல் தோல்வியால் வாட்ஸ் ஆப்பில் வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்..
தற்கொலை செய்து கொண்ட மாணவர் அழகு, காதலை மையப்படுத்தி பல்வேறு டிக்டாக் வீடியோக்கள் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இன்றைய 2கே கிட்ஸ் சிறுவர்களுக்கு மீனை கூட அரும்புகிறதோ இல்லை, அதற்குள் காதல் அரும்புகிறது. காதல் தோல்வி, காதலில் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் எதிர்காலத்தை தொலைப்பது அல்லது உயிரையே இழப்பது போன்ற விபரீதங்களில இறங்கிவிடுவார்கள்.
காதல் பாடம்
அப்படியான விபரீத முடிவால், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் அழகு முருகன் உயிரிழந்துள்ளார். பல்வேறு டிக்டாக் வீடியோக்களை போட்டு மகிழ்ச்சியாக இருந்து வந்த அழகு முருகனுக்கு (வயது 19) மீசை அரும்பும் போதே காதலும் சேர்த்து அரும்பி இருக்கிறது. தனியார் கல்லூரியில் பிஇ முதலாமாண்டு படித்து வந்துள்ளார். கல்லூரி படிப்பை தொடங்கியவர் காதல் பாடத்தை படிக்க தொடங்கி உள்ளார்.
தற்கொலை
அழகு முருகன் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார் அந்தப் பெண் சில நாட்களாக பேச மறுத்து வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த அழகுமுருகன் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெற்றோரையும், உறவினர்களையும், நண்பர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
காதலை ஏற்க மறுப்பு
தற்கொலை செய்யும் முன் கல்லூரி மாணவர் அழகு முருகன் வெளியிட்ட வீடியோவில் தானும் குறிப்பிட்ட பெண்ணும் ஓராண்டாக காதலித்து வந்ததாகவும், ஆனால் அவர் திடீரென காதலை கைவிட்டுவிட்டு மறக்க சொல்லியதாகவும் இதனால் மனம் உடைந்து போன தான் இந்த முடிவை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
வழக்கு பதிவு
காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த நேரில் வந்த வெம்பக்கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதல் உள்பட எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வு அல்ல. தற்கொலை எண்ணங்களில் மீண்டு, நம்பிக்கையுடன் வாழ்க்கையை தொடங்கினால் புதிய வழிகள் பிறக்கும்.