கலெக்டர் ஆபிஸ் போறீங்களா.. தமிழ்நாட்டிற்கே சூப்பர் தீர்வு.. அதிரடி காட்டிய விருதுநகர் கலெக்டர்
விருதுநகர்: கலெக்டர் ஆபிஸில் மனு கொடுக்க போகும் பலருக்கும் உள்ள பிரச்சனைக்கு சூப்பர் தீர்வினை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் உருவாக்கி உள்ளார். இதன் காரணமாக விருதுநகர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அது என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் திங்கள்கிழமை தோறும், நேரடியாக கலெக்டரிடமே மக்கள் குறைகளை மனுவாக தெரிவிக்கலாம். நிர்வாகம், போலீஸ், காவல், வேளாண்மை என எந்த பிரச்சனை என்றாலும் மாவட்ட கலெக்டரிடமே மனு அளிக்கலாம். அவர் குறைகளை கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து விளக்கமும் கேட்பார். நிர்வாக ரீதியாக உடனே நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

ஒரு மாவட்டத்தில் கலெக்டர் தான் அனைத்து துறைகளுக்கும் தலைமை நிர்வாக அதிகாரி என்பதால் எந்ததுறையில் எந்த பிரச்சனை என்றாலும் அவரிடம் முறையிட்டு தீர்வு பெறலாம் என்பதற்காகவே ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் குறைதீர் முகாம்கள் நடக்கின்றன.இதில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்கும் என்பதால் பலரும் திங்கள்கிழமை மனு கொடுக்க வருவார்கள்.
அப்படி வரும் பொதுமக்கள் பலர் தங்களின் குறைகளை பேப்பரில் மனுவாக எழுதி கொண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் அளிப்பார்கள். மாவட்ட ஆட்சியர் மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பார். அவர்களும் எந்த நடவடிக்கை எடுக்க முடியும் என்பதையும் மனுதாருக்கு தெரிவிப்பார்கள்.
ஆனால் கலெக்டர் ஆபிஸ்க்கு வரும் மக்கள் சந்திக்கும் முதல் பிரச்சனை என்னவென்றால், மனுவினை சரியாக எழுதி செல்வது தான். எழுதப்படிக்க தெரியாத பாமர மக்கள் பலர் மனுவை வெளியில் பணம் கொடுத்து எழுதும் நிலை தான் இருக்கிறது,
இந்நிலையில் கையில் காசு இல்லாத மக்கள் மனுவை எழுத பிறர் உதவியை நாடி அங்கும் இங்கும் அலைவதும் நடக்கிறது. இதை பார்த்த சில கலெக்டர்கள் பல்வேறு வழிகளில் தீர்வுகளை உருவாக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் சூப்பர் உத்தரவினை பிறப்பித்துள்ளார். கலெக்டர் ஆபிஸ்க்கு வரும் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் இலவசமாக மனுக்கள் எழுதி தர தனி இடத்தை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏற்படுத்தி உள்ளார்.
இங்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கேட்டு கொண்டதற்கு இணங்க பாரதி யுவகேந்திரா மற்றும் வேர்ல்ட் விசன் இந்தியா என்ற தன்னார்வ அமைப்புகள் இலவசமாக மனு எழுதி தரும் சேவையை தொடங்கி இருக்கின்றன. இதேபோல் தமிழகம் முழுவதும் இலவசமாக மனு எழுதும் நிலை வந்தால், பிரச்சனையுடன் வரும் ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.












Click it and Unblock the Notifications