விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 20 பேர் பலி - அமைச்சர்களை உடனடியாக அனுப்பிய முதல்வர் ஸ்டாலின்!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டியில் இன்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 20 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கோரச் சம்பவம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.
விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் உள்ள வனஜா என்ற தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு மருந்துகள் பயங்கரமாக வெடித்து சிதறியதால் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிர்வு ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு அறைகள் முற்றிலும் தரைமட்டமானது. இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், விருதுநகர் பட்டாசு ஆலை துயரச் சம்பவம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலர் உயிரிழந்துள்ள துயரச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
மீட்புப் பணிகளை விரைவுபடுத்திக் கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரையுமாறு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரைக் கேட்டுக்கொண்டுள்ளேன். இதுகுறித்து அறிந்ததுமே மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, தேவைப்படும் அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைக்க அறிவுறுத்தியுள்ளேன்." எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். இத்தகைய வெடிவிபத்து சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதும், அப்பாவித் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.
இதனை தடுக்கின்ற வகையில் பட்டாசு தொழிற்சாலைகளில் உரிய கட்டுப்பாடுகளை செயல்படுத்தாத காரணத்தால் தான் இத்தகைய விபத்துகள் ஏற்படுகின்றன. தற்போது கோடைகாலம் உக்கிரமாக இருக்கும் நேரத்தில் உரிய பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் பட்டாசு தொழில் ஈடுபடுபவர்கள் இருக்கவேண்டும்.
அதிகாரிகளின் உரிய கண்காணிப்பு இல்லாத நிலையில் தொழிற்சாலை ஒழுங்குமுறை நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. இதுபோன்ற அலட்சியப் போக்கு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணைகளின் இறுதியில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, பாதுகாப்பான முறையில் பட்டாசு தொழில் தொடர்ந்து நடைபெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்குவதோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணமும் அரசு செலவில் சிறந்த சிகிச்சையும் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications