நெஞ்சை உறைய வைத்த விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து.. பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் ஆண், பெண்கள் என 23 பேர் உயிரிழந்தன நிலையில் மேலும் 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரண்டு பேர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டங்களில் அதிகளவில் பட்டாசுகள் தயார் செய்யப்படுகிறது. நாட்டின் பட்டாசுகளில் சுமார் 90 சதவீதம் அளவுக்கு இங்குள்ள ஆலைகளில் இருந்தே தயார் செய்து அனுப்பப்படுகின்றன. இங்குள்ள ஆலைகளில் ஆண்களும், பெண்களுமாக சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாக வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று விருதுநகர் கோவிந்தநல்லூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு உற்பத்தி ஆலையில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு வேலை செய்து வந்த ஆண், பெண் தொழிலாளர்கள் உடல் சிதறியும், தீயில் கருகியும் பலியான கோர சம்பவம் அரங்கேறியுள்ளது.
கட்டனார்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரான முத்துமாணிக்கம் (வயது 52) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் தான் இந்த விபத்தானது நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரியின் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 5 அறைகளில் பட்டாசு உற்பத்தி நடந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்றபோது, ஆண்களும், பெண்கள் என 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டு இருந்தனர்.
வழக்கம்போல் பட்டாசு உற்பத்தி நடந்து வந்த நிலையில் மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் திடீரென ஒரு அறையில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. பின்னர் அடுத்தடுத்த அந்த அறையில் இருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறின. இதனால் பட்டாசு ஆலை முழுவதும் வெடிகள் வெடித்து சிதற ஆரம்பித்தன. பேன்சி ரக வெடிக்கு என்பதால் அதிக வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பயங்கர சத்தத்துடன் அங்கிருந்த 5 அறைகளும் சேதம் அடைந்ததுடன், சுமார் 10 கி.மீ. தூரத்து பயங்கர வெடிசத்தம் கேட்டுள்ளது. மேலும் யாரும் அருகில் நெருங்க முடியாத வகையில் பட்டாசுகள் வெடித்தன. இதனால் கிராம மக்கள் கண்ணீருடன் பதறியடித்து ஓடிவந்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து இடிபாடுகளுக்கு இடையே உடல்கள் சிதறிய நிலையிலும், கருகிப்போய் கிடந்த நிலையிலும் இருந்தது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மொத்தம் 23 பேர் பலியானது தெரியவந்தது.
மேலும் பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. மீட்பு பணியின் போதும் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால் காவலர்கள், தீயணைப்பு வீரர்களும் படுகாயமடைந்தனர். 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 7 பேர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று இதில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications