நானும் பட்டாசு ஆலை தொழிலாளிதான்.. விடமாட்டேன்.. விருதுநகரில் கொந்தளித்த ராஜேந்திர பாலாஜி
விருதுநகர்: நானும் பட்டாசு ஆலையில் வேலை பார்த்தவன்தான், பட்டாசு பிரச்சினைக்கு சட்டரீதியாக தீர்வு காணப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உணர்ச்சிப்பூர்வமாக, போராட்டத்தில் ஈடுபட்ட பட்டாசு உற்பத்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பட்டாசு உற்பத்தி மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து சிவகாசியில் பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டு பல லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

இந்தநிலையில் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் அதன் பணியாளர்கள் இன்று விருதுநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் மறியல் போராட்டம் நடத்தினர்.
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற போராட்டத்தால் அந்த பகுதியே ஸ்தம்பித்தது. காவல்துறையினர் பெருமளவு குவிக்கப்பட்டனர். அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவிய சூழலில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போராட்டக்காரர்கள் மத்தியில் வாகனத்தில் நின்றபடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:
தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், இந்திய அளவிலான மாசுக்கட்டுப்பாடு வாரியமும் பட்டாசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. அப்படி இருந்தும் உச்சநீதிமன்றத்தில் இதுபோன்ற ஒரு உத்தரவு வந்துள்ளது என்றால் அது நமது விதி என்று தான் கூற வேண்டும். அதற்கு மாற்று வழி செய்ய வேண்டும்.
பசுமை பட்டாசு தயார் செய்யுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பசுமை பட்டாசு தயாரிப்பது எப்படி என்று விளக்கம் எங்களுக்குத் தரப்பட வேண்டுமென்று பட்டாசு தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
காபி கொட்டை போடாமல் காபி எப்படி தயாரிக்க முடியும்? டீத்தூள் தயாரிக்காமல் டீ தயாரிக்க சொன்னால் எப்படி? இந்த தீர்ப்பை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்வது. எப்படி பிழைப்பது. இந்தியாவில் தானே விருதுநகர் மாவட்டம் உள்ளது. நாங்கள் டெல்லிக்கு சென்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகளை சந்திக்க உள்ளோம். மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நமக்காக கடுமையாகப் பேசியுள்ளார்.
1000, 2000 ரூபாய் நோட்டுகளை பாக்கெட்டில் வைத்து பழக்கப்பட்டவர்கள் சிவகாசி மக்கள். இன்று, ஐந்து ரூபாய்க்கு வழி இன்றி தவிக்கிறார்கள். ரேஷன் கடையில் அரிசி வாங்க முடியாமல் கஷ்டப்படுவதாக பெண்கள் கூறுகிறார்கள். இங்கே நான் ஒரு அமைச்சராக வரவில்லை. ஒரு மனிதனாக வந்துள்ளேன். உங்களில் ஒருவனாக வந்துள்ளேன், உங்களுக்கு ஒரு பிரச்சனை என்று சொன்னால் உங்களில் ஒருவனாக நின்று உங்களை பாதுகாப்பதற்கு நான் துணை நிற்பேன். நமது நோக்கம் மத்திய அரசுக்கு இப்பிரச்சினை, தெரிய வேண்டும். ஊடகங்களுக்கு தெரிய வேண்டும், உலகத்திற்கு தெரிய வேண்டும்.
உலகத்தில் எங்குமே பட்டாசுக்கு தடை கிடையாது. பட்டாசு வெடிப்பதற்கு தடை கிடையாது. ஏன் இந்தியாவில் மட்டும் தடை விதிக்க வேண்டும்? அப்படியான சூழலை இந்தியாவில் ஏன் உருவாக வேண்டும்? இந்த தீர்ப்பை நீதிமன்றம் சொல்லி உள்ளது. எனவே சட்டரீதியாக இதை அணுக வேண்டும். தமிழக அரசு உங்களுக்கு உறுதுணையாக இருந்து இந்த சட்டப் போராட்டத்தில் வெற்றி பெறும்.
நானும் கல்வி கற்கும் காலத்தில் பட்டாசு ஆலையில் வேலை பார்த்துள்ளேன். நான் ஒரு பட்டாசு தொழிலாளி. பள்ளிக்கூடம் விட்டு வந்த பிறகு தீப்பெட்டி ஒட்டியுள்ளேன். தீப்பெட்டி தொழிலாளர் வேலை, பட்டாசு தொழில் வேலை என அத்தனை வேலைகளும் எனக்கு தெரியும். அவர்களின் துன்பங்களும் எனக்கு தெரியும். உங்களில் ஒருவனாக நான் கூறுகிறேன், இந்த பட்டாசு ஆலைகளை திறப்பதற்கு எது தடையாக இருந்தாலும் அதை நீக்க அனைவரும் இணைந்து நடவடிக்கை எடுப்போம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications