நிர்மலா தேவி வழக்கு.. தண்டனை அறிவிப்பு தள்ளிவைக்கப்பட்டது ஏன்? கடைசி நேரத்தில் நடந்தது என்ன?
விருதுநகர்: நிர்மலா தேவி வழக்கில் இன்று பிற்பகல் தண்டனை அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், பின்னர் அது நாளைய தினத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியையாக பணியாற்றியவர் நிர்மலா தேவி. இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் வேலை செய்து வந்துள்ளார்.

இதற்கிடையே இவர் தேவாங்கர் கல்லூரியில் படித்து வந்த ஏழை மாணவிகளைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார். அப்பகுதியின் முக்கிய பிரமுகர்களுக்கு அந்த மாணவிகளை அழைத்துச் செல்வதே அவரது நோக்கமாக இருந்துள்ளது.
நிர்மலா தேவி: அப்படி தான் மாணவி ஒருவரிடம் நிர்மலா தேவி பேசிய ஆடியோ பகீர் கிளப்பி இருந்தது. அந்த ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையில் மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். கடந்த 2018இல் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியையே இப்படி நடந்து கொள்வாரா எனத் தமிழகமே கொந்தளித்தது. இந்த வழக்கில் நிர்மலா தேவியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையே ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், நிர்மலா தேவி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவரது தண்டனை விவரங்கள் மதியம் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது. இருப்பினும், கடைசி நேரத்தில் தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறியது.
தண்டனை அறிவிப்பு: தண்டனை அறிவிப்பில் கடைசி நேரத்தில் என்ன நடந்தது.. ஏன் நாளைக்குத் தள்ளி வைக்கப்பட்டது என்பதை CBCID தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் விளக்கியுள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், "இந்த வழக்கை விசாரணை செய்த சிபிசிஐடி அதிகாரிகள் மிகச் சிறப்பான முறையில் இந்த வழக்கை விசாரித்த குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கைப் பொருத்தவரை ஆள்கடத்தலுக்கு நமது ஐபிசி சட்டப்படி 7 அல்லது 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர் ஒருவராக இருந்தால் 7 ஆண்டுகளும் ஒருவருக்கு மேலாக இருந்தால் 10 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்க வேண்டும். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டது 4 மாணவிகள். எனவே அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என நினைக்கிறேன். நீதிமன்றம் அனைத்தையும் கருத்தில் கொண்டு தான் தீர்ப்பு வழங்கி வருகிறது.
என்ன காரணம்: சட்டப்பிரிவு 235இன் கீழ் சில காரணங்களைக் குறிப்பிட்டு தண்டனையைக் குறைத்துத் தருமாறு வாதங்களை முன்வைக்கலாம். இந்த வாய்ப்பு இவர்களுக்கு இருக்கிறது. அதை அளிக்காமல் தீர்ப்பு அளிக்கக்கூடாது என்பதற்காகவே தண்டனை விவரங்கள் அறிவிப்பதை நாளைக்குத் தள்ளி வைத்துள்ளனர். தண்டனை குறித்து சில வாதங்களை முன்வைக்க வேண்டி இருப்பதால் எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என்று அவர்கள் தரப்பு வழக்கறிஞர் கேட்டுள்ளார்.
என்ன நடக்கும்: நாளை அவர்கள் உடல்நிலையைக் காரணமாகச் சொல்லலாம்.. அல்லது வழக்கின் தன்மை காரணமாக ஏ2, ஏ3 விடுவிக்கப்பட்டுள்ளதால் தண்டனையை எங்களுக்கும் குறைத்துத் தாருங்கள் எனக் கேட்கலாம். அவர்கள் என்ன வாதம் முன்வைப்பார்கள் என்பது நாளை தான் தெரிய வரும். அவருக்குத் தண்டனை கிடைப்பதெல்லாம் உறுதி தான். தண்டனையைக் குறைக்க சொல்லி மட்டும் முறையிட உள்ளனர். ஏற்கனவே குற்றவாளி என்று அறிவித்துவிட்டார்கள் என்பதால் இன்றே நிர்மலா தேவி சிறைக்குத் தான் செல்ல நேரிடும்.
இந்த சம்பவம் நடந்து ஏதோ பல ஆண்டுகள் ஆகிவிட்டது போல நமக்குத் தோன்றலாம். ஆனால் மொத்தம் 104 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. பல ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அனைத்தையும் நீதிமன்றம் குறுகிய காலத்தில் விசாரித்துள்ளது. வழக்கு விசாரணையைச் சீக்கிரம் முடிக்க உதவிய அனைவருக்கும் நன்றி" என்றார்.












Click it and Unblock the Notifications