அண்ணனுக்காக வந்த தம்பி.. கிளம்பும்போது விருதுநகர் பெண்கள் வைத்த கோரிக்கை! ஆடிப்போன சண்முக பாண்டியன்!
விருதுநகர்: விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரனுக்கு வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியனிடம், பெண்கள் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் களத்தில் உள்ளனர். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன். அவருக்காக விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

முதல் முறையாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த சண்முக பாண்டியனுக்கு தேமுதிக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சண்முக பாண்டியன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து திறந்த ஜீப்பில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மக்கள் மத்தியில் பேசிய சண்முக பாண்டியன், "இதுதான் நான் முதலில் மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரம். என்னுடைய அண்ணனுக்காக நான் ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன். நான் இன்று வந்தபோது ஒரு முறையாவது அப்பாவை வெற்றி பெற வைத்திருக்கலாம் என்று வருத்தப்பட்டார்கள். என்னுடைய அப்பாவை வெற்றி பெற வைக்கவில்லை என்று வருத்தப்பட வேண்டாம்.
அச்சு அசலாக எங்கள் அப்பா சாயலில் இருக்கும் எனது அண்ணனை வெற்றி பெறவைத்தாலும் என் அப்பாவின் ஆத்மா சாந்தி அடையும். இந்த மக்களுக்கு என்ன பிரச்சினை உள்ளதோ, அதை என்னுடைய அண்ணன் இந்தத் தொகுதியில் இருந்து, கேட்டறிந்து தீர்த்து வைப்பார்." என்று உறுதி கொடுத்தார்.

அப்போது அப்பகுதி பெண்கள் சிலர், "நீங்க ஜெயிச்சு வந்துட்டீங்கனா, தங்கம் விலையை குறைச்சு கொடுங்க.. எங்களால தங்கம் வாங்கவே முடியல.. அவ்வளவு விலை விக்கிது" என ஆதங்கத்துடன் கோரிக்கை வைத்தனர். அதனால் அதிர்ந்து போன சண்முக பாண்டியன், பின்னர் சுதாரித்து, "கண்டிப்பாக, என் அண்ணனால் என்ன செய்ய முடியுமோ, டெல்லியில் பேசி மக்களுக்காக செய்து கொடுப்பார்" எனக் கூறினார்.
தொடர்ந்து, அப்பகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்த சண்முக பாண்டியன், இளநீர் கடையில் அனைவருக்கும் இளநீர் வாங்கிக் கொடுத்து தானும் குடித்தார். தனது உதவியாளரிடம் எவ்வளவு என்று கேட்டு கொடுத்துவிடுமாறு கூறினார். அதற்கு அங்கிருந்த நிர்வாகிகள், "நாங்க எதுக்கு இருக்கோம்.." என உரிமையுடன் கூறினர். அவர்களிடம் பரவாயில்லை பரவாயில்லை எனக் கூறினார் சண்முக பாண்டியன்.












Click it and Unblock the Notifications