F 35 டூ பி-1 பாம்பர் வரை.. 150 விமானங்களை வைத்து வெனிசுலாவை கைப்பற்றிய டிரம்ப்! நள்ளிரவில் திக்திக்
வாஷிங்டன்: அமெரிக்கா தனது அண்டை நாடான வெனிசுலாவை கைப்பற்றி உள்ளது. அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸை கைது செய்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெனிசுலாவை கைப்பற்றி உள்ளார். இதற்காக நள்ளிரவில் எஃப் 35 முதல் பி -1 பாம்பர் வரை 150க்கும் அதிகமான விமானங்களை அமெரிக்கா பயன்படுத்திய தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த வேண்டும் என்றாலே பெரிய பிளான் வேண்டும். அப்படியென்றால் அண்டை நாட்டுக்குள் நுழைந்து அதன் பாதுகாப்பு அரண்களை உடைத்து அதிபரையே கைது செய்ய முடியுமா? என்றால் முடியும் என்கிறது அமெரிக்கா. அதோடு தற்போது வெற்றிகரமாக அதனை செய்து முடித்துள்ளது.

அமெரிக்கா, வெனிசுலாவுக்குள் நுழைந்து அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்துள்ளது. அமெரிக்கா - வெனிசுலா இடையே நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின்பேரில் நள்ளிரவில் போர் விமானங்கள் மூலமாக வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் தாக்கப்பட்டது. 7 இடங்களில் குண்டுகள் வீசப்பட்டது.
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் கைது செய்து நாடு கடத்தியது. இது தான் தற்போது சர்வதேச அளவில் பேசும் பொருளாகி உள்ளது. வெனிசுலாவும், அமெரிக்காவும் பக்கத்து பக்கத்து நாடுகள். இருநாடுகளை கரிபீயன் கடல் தான் பிரிக்கிறது. வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் சப்ளை இருப்பதோடு, சட்டவிரோத குடியேற்றமும் உள்ளது. இதனால் தான் அமெரிக்கா வெனிசுலா மீது கடும் கோபம் கொண்டது.
இந்நிலையில் வெனிசுலாவில் தாக்குதல் நடத்தி அதன் அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் மனைவி சிலியா ஃபுளோரஸை கைது செய்தது எப்படி என்பது பற்றி அமெரிக்க கூட்டு படை தளபதிகளின் தலைவரான ஜெனரல் டான் கெய்ன் விளக்கினார். இதுபற்றி அவர் கூறுகையில்,‛‛வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ, அவரது மனைவியை கைது செய்ய இரவோடு இரவாக நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் பல மாதங்களாக திட்டமிட்டு துல்லியமாக அதனை செயல்படுத்தி உள்ளோம்.
வெனிசுலாவை தாக்குவதற்கு அமெரிக்கப் படைகள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு முழுவதும் தயார் நிலையில் இருந்தது. ஆனால் சரியான காலநிலை வரவில்லை. நேற்று இரவு விமானங்கள் பறக்க சாதகமான வானிலை கிடைத்தது. இதனால் உயரம் குறைவாக ஹெலிகாப்டர்கள் பறந்தன. அதற்கு மேல்பகுதியில் போர் விமானங்கள் பறந்து பாதுகாப்பு வழங்கின.
இதற்காக 20 வெவ்வேறு தளங்களில் இருந்து 150க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டது. விமானப் படையின் F-22, F-35 மற்றும் F-18 போர் விமானங்கள், B-1 குண்டுவீச்சு விமானங்கள், ட்ரோன்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன. மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்யும் பொறுப்பை கொண்ட ஹெலிகாப்டர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தான் இந்த விமானங்களின் பணியாக இருந்தது.''என்றார்.












Click it and Unblock the Notifications