விமானத்தில் வரம்பு மீறிய முதியவர்.. போதையில் பணியாளருக்கு முத்தம் வேற.. போலீஸ் வந்ததும் 'கப்சிப்'
வாஷிங்டன்: அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் போதை தலைக்கேறிய 61-வயதான பயணி ஒருவர், விமானத்தின் ஆண் பணியாளருக்கு முத்தம் கொடுத்ததோடு ரகளையில் ஈடுபட்டது பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் 61-வயதான முதியவர் ஒருவர் விமானத்தில் குடிபோதையில் விமான ஊழியருக்கு முத்தம் கொடுத்ததோடு விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இது குறித்த விவரம் வருமாறு:-

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இருந்து அலஸ்காவிற்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தின் முதல் வகுப்பில் டேவிட் ஆலன் பர்க் (வயது 61) என்ற பயணியும் பயணம் செய்தார். முதல் வகுப்பு பயணி என்பதால் விமானம் டேக் ஆப் ஆவதற்கு முன்பே அவருக்கு மது அருந்த அனுமதி உள்ளது.
ஆனாலும் பாதுகாப்பு கருதி பணியில் விமான பணியாளர்கள் அனுமதி கொடுக்கவில்லை. விமானம் டேக் ஆஃப் ஆன பிறகு அந்த முதியவர் விரும்பி கேட்டதால் விமான பணியாளர்கள் அவருக்கு மது அருந்த அனுமதி கொடுத்தனர். மது போதையில், அந்த பயணி ஆண் விமான ஊழியர் ஒருவரிடம் வரம்பு மீறி நடந்துள்ளார். விமான ஊழியரை பிடித்து முத்தம் கொடுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அதோடு விமானிக்கு கொண்டு சென்ற உணவு டிரேவையும் இழுத்து சேதப்படுத்தியுள்ளார். குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட முதியவரை ஒருவழியாக மேலும் சில விமான பணியாளர்கள் வந்து இருக்கைக்கு கொண்டு சென்றனர். விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட இந்த களேபரம் குறித்து விமான நிலையத்தை தொடர்பு கொண்ட விமானி இது குறித்து தகவல் தெரிவித்தார்.
சிறிது நேரத்தில் ரகளையில் ஈடுபட்ட அந்த பயணியும் தனது இருக்கையில் அமர்ந்து உறங்கிவிட்டார். விமானம் தரையிறங்கியதும் முதியவரிடம் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், விமானத்தில் தான் அத்துமீறி எந்த செயலிலும் ஈடுபடவில்லை எனவும் விமான பணியாளருக்கு முத்தம் கொடுக்கவில்லை எனவும் விடாப்பிடியாய் கூறியிருக்கிறார்.
எனினும் மது அருந்தியதை மட்டும் அந்த முதியவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் மீது விமான பணியாளர்களுக்கு இடையூறு செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு பின்னர் அந்த முதியவரை விடுவித்த பாதுகாப்பு அதிகாரிகள் வரும் 27 ஆம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications