விமான நிலையத்தில் பயணிகளின் லக்கேஜ்களில் பணம் திருட்டு.. சிசிடிவியில் வசமாக சிக்கிய அதிகாரிகள்
வாஷிங்டன்: விமான நிலையத்தில் பயணிகள் ஏதேனும் சட்ட விரோத செயலில் ஈடுபடுகிறார்களா என கண்காணிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவது உண்டு. ஆனால், இது போன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளே, பயணிகளின் லக்கேஜ்களில் இருந்து பணத்தை திருடிய சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.
பயணிகள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் ஆங்காங்கே திருடர்கள் ஜாக்கிரதை என எச்சரிக்கை வாசகங்களை பார்க்க முடியும். பயணிகளின் கவனத்தை திசை திருப்பி அவர்களிடம் உள்ள பொருட்களையும் லக்கேஜ்களையும் திருடுவதற்கு என்றே சில கும்பல் நடமாடும். இந்த திருட்டு கும்பல்களை பிடிக்க போலீசாரும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள்.

அதேபோல், பயணிகள் கொண்டு வரும் லக்கேஜ்களிலும் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளதா என்பதை கண்டறிய எக்ஸ் ரே கருவி மூலம் சோதனை நடத்தப்படும். விமான நிலையங்களிலும் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் சர்வ சாதாரணமாக இதுபோன்ற பரிசோதனைகள் நடப்பது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் இது போன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளே பயணிகளின் லக்கேஜ்களில் இருந்து பயணிகளின் விலை உயர்ந்த பொருட்களை திருடிய ஒரு ஷாக்கிங் சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன் விவரம் வருமாறு:- அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகளாக பணியாற்றியவர்கள் ஜோஷு கோன்ஸ்லேஸ் (வயது 20) மற்றும் லபாரியஸ் வில்லியம்ஸ் (வயது 33). இவர்கள் இருவரும் விமான நிலையத்தில் பரிசோதனைக்காக, எக்ஸ்ரே கருவி வழியாக அனுப்பப்படும் பயணிகளின் பைகளில் இருந்து, கரன்சி ரொக்கம் மற்றும் நகைகள் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களை 2 அதிகாரிகளும் சேர்ந்து நைசாக கண் இமைக்கும் நேரத்தில் திருடியுள்ளனர்.
கடந்த ஜூன் மாதமே இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. இருவரும் கைது நடவடிக்கைக்கும் உள்ளாகினர். அதன்பிறகு இருவருமே பணியில் இருந்து நீக்கப்பட்டனர். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சம்பவத்தின் காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது இந்திய மதிப்பில் தோராயமாக 82 ஆயிரம் ரூபாய் அளவுக்கு திருடி வந்துள்ளனர்.
எக்ஸ்ரே பரிசோதனைக்கு பயணிகளின் பைகளை வரிசையாக அனுப்பிவைக்கும் போது, பைகளில் இருந்து இருவரும் பணம் மற்றும் மதிப்பு மிக்க பொருட்களை திருடும் காட்சிகள் தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. விமான நிலையத்தில் கடத்தல்காரர்கள் அதிக அளவில் முறைகேட்டில் ஈடுபடுவதை கண்காணிக்க இதுபோன்ற பரிசோதனைகள் நடைபெறும் நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகளே திருட்டு வேலையில் ஈடுபடுவது தொடர்பான காட்சிகள் வெளியாகி அமெரிக்காவில் விமான பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications