டிரம்பிற்கு பதிலடி கொடுத்த சீனா.. இனி அமெரிக்க பொருட்களுக்கு 125% வரி.. ஜின்பிங் அதிரடி உத்தரவு
வாஷிங்டன்: அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்து வருகிறது. மற்ற நாடுகள் மீதான ரெசிப்ரோக்கல் வரியை நிறுத்தி வைத்த டிரம்ப் சீனா மீதான வரியை மட்டும் 145%ஆக உயர்த்தியிருந்தார். இதற்கிடையே அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும் அமெரிக்கா மீதான வரிகளை உயர்த்தியுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து வருவது சர்வதேச வணிக பதற்றத்தை அதிகரித்துள்ளது
திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், ரெசிப்ரோக்கல் வரியை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அடுத்த 90 நாட்களுக்கு வரிகளை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார். அதேநேரம் சீனா மீதான வரியை 145% ஆக உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டார். இது இரு நாடுகளுக்கும் இடையே வணிக போர் தீவிரமடைந்து வருவதையே உணர்த்துகிறது.

பழிக்கு பழி வரி
இதற்கிடையே அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும் தனது வரவுகளை உயர்த்தியுள்ளது. இதற்கு முன்பு அமெரிக்க இறக்குமதிகளுக்கு 84% வரியை விதிக்கப்போவதாக சீனா அறிவித்திருந்த நிலையில், அதை இப்போது 125%ஆக சீனா உயர்த்தியுள்ளது. அதேநேரம் இதற்கு மேல் பழிவாங்கப் போவது இல்லை என்பது போலவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனா வரி
இது தொடர்பாக சீன பொருளாதார அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், "சீனா மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகள் அசாதாரணமானது. இது சர்வதேச வர்த்தக விதிகள், அடிப்படை பொருளாதார சட்டங்களை கடுமையாக மீறுவதாக இருக்கிறது. இது ஒருதலைப்பட்சமான மிரட்டல் மற்றும் வற்புறுத்தும் ஒரு நடவடிக்கை. சீனாவின் நலன்களை சீர்குலைக்கும் நடவடிக்கையை அமெரிக்கா தொடர்ந்தால் அதற்கு எதிரான நடவடிக்கைகளை உறுதியாக எடுப்போம். இந்த விவகாரத்தில் நிச்சயம் இறுதிவரை போராடுவோம்" என்றார்.
அதேநேரம் இதன் பிறகு சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா தொடர்ந்து கூடுதல் வரிகளை விதித்தாலும் கூட இனமேல் பதிலடி கொடுக்கப்போவது இல்லை என்பதை சீனா தெளிவுபடுத்தியிருக்கிறது. சீன அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், "வரும் நாட்களில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா தொடர்ந்து கூடுதல் வரிகளை விதித்தால் அதை புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகைக்கு பொருந்தாது
டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் சந்திக்கும் போது வரிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை அதிகாரிகள் 90 நாள் நிறுத்தம் என்பது சீனாவுக்கு பொருந்தாது என்றும் சீனா மீதான வரியை 125%ஆக அதிகரிப்பதாகவும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா சீனா வர்த்தக போர்
இரு நாடுகளும் இதுபோல மாறி மாறி வரிகளை அறிவித்து வருவது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது. ஏற்கனவே அமெரிக்கா சீனா இடையே வரி அறிவிப்பால் அமெரிக்க பங்குச்சந்தை சரிந்து வருகிறது. அதேபோல தங்கமும் வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டு வருகிறது. அதேபோல அமெரிக்க டிரஷரி பாண்ட்களும் கடும் அழுத்தத்தில் இருக்கிறது. இதனால் பல்வேறு வல்லுநர்களும் தரப்பினரும் டிரம்ப் வரிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இருப்பினும், டிரம்ப் சீனா மீதான வரிகளை நிறுத்தி வைக்க வாய்ப்பு குறைவு என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications