கடலுக்கு கூட 'மாஸ்க்' போட முடியுமா? நிரூபித்து காட்டிய 'மனித குலம்' - என்ன ஆகப் போகுதோ!
அமெரிக்கா: கொரோனா 2ம் அலை பல உலக நாடுகளை படுத்தியெடுத்து, இப்போது இந்தியாவை சர்வநாசம் செய்து கொண்டிருக்க, எதிர்காலத்திலும் வேறு ரூபத்தில் உலகை ஒரு வழி செய்துவிடுமோ என்ற அச்சத்தை இந்த செய்தி ஏற்படுத்துகிறது.
மனிதனுக்கு 2020க்கு முன்பு வரை முகத்தில் கண், மூக்கு, வாய் போன்ற உறுப்புகளை இருந்தன. ஆனால், 2020லிருந்து புதிதாக தோன்றிய உறுப்பு மாஸ்க். இன்று இந்த மாஸ்க் இல்லையெனில், கொரோனா உங்கள் வீட்டின் நடு ஹாலில் வந்து ஜம்மென்று உட்கார்ந்துவிடும்.
மாஸ்க் மட்டுமல்ல.. தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல், தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்த்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவற்றை நாம் அலட்சியம் செய்தால், அதன் விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும்.

கடலுக்கு ஆபத்து
இந்நிலையில், முகக் கவசம் குறித்த ஆய்வு ஒன்று நம்மை 'இது என்னடா புது கொடுமை' என்று புலம்ப வைக்கிறது. கொரோனா பேரிடர் காலம் தொடங்கியதில் இருந்தே, ஒவ்வொரு மாதமும் 129 பில்லியன் முகக் கவசமும், 65 பில்லியன் கையுறையும் பயன்படுத்தப்பட்டு வருகிறதாம்! இருங்க.. இருங்க.. மெயின் மேட்டர் இதுவல்ல.. இதில் 2020ம் ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 1.56 பில்லியன் முகக் கவசங்கள் கடலுக்குள் கொட்டப்பட்டிருக்கிறது என்று ஹாங்காங்கைச் சேர்ந்த கடல் பாதுகாப்பு அமைப்பான, 'OceansAsia' தெரிவித்துள்ளது.

மீன்களை மிஞ்சும் பிளாஸ்டிக்
கொரோனாவுக்காக பயன்படுத்தப்படும் PPE கிட்கள் கடலுக்குள் இருப்பதை இவர்கள் கண்டறிந்துள்ளனர். 2048க்குள் கடலில் மீன்களை விட பிளாஸ்டிக் அதிகமாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், தற்போது கொரோனாவின் PPE கிட்களும் அதனுடன் இணையும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் அச்சுறுத்தல்
குறிப்பாக முகக் கவசங்கள் மிகவும் ஆபத்தானதாகவும், கடல் வாழ் உயிரினங்களுக்கு சிக்கலானதாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாஸ்க்குகளில் இருந்து உருவாக்கப்படும் மைக்ரோபிளாஸ்டிக் தான், கடல் வாழ் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கப் போகிறது என்று எச்சரிக்கின்றனர்.

நல்லா கேட்டுக்கோங்க மக்கா
2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் உலகெங்கிலும் உள்ள கடற்கரைகள் மற்றும் நீர்வழிகளில் இருந்து 107,219 பிபிஇ பொருட்களை தன்னார்வலர்கள் அகற்றியுள்ளனர். மாஸ்க், கையுறைகள், முகக் கவசங்கள் போன்றவற்றை கண்டறிந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இதில் என்ன கொடுமையென்றால், பறவைகள் கொரோனா மாஸ்க்குகள் கொண்டு தங்கள் கூடுகளை கட்டுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்படிப்பட்ட அபாயங்களை தவிர்க்க, மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையிலான மாஸ்க்குகளை பயன்படுத்தவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இதை நாம் உண்மையில் சீரியஸாக எடுத்துக் கொண்டால் நல்லது. துவைத்து மீண்டும் பயன்படுத்தக் கூடிய மாஸ்க்குகளை நாம் பயன்படுத்தினால், கடலுக்கு ஏற்படும் பாதிப்பை சற்று குறைக்க முயற்சிக்கலாம். இதன் விளைவு இப்போது நமக்கு தெரியாது. 30 வருடங்கள் கழித்து மீன் பிடிக்க தூண்டில் போட்டால், பிளாஸ்டிக் வரும் பாருங்க... அப்போ தெரியும்!.












Click it and Unblock the Notifications