“இந்தியாவுடன் வர்த்தகம் சாத்தியம்! ஆனால்..” ட்விஸ்ட் வைத்த டிரம்ப்! இதெல்லாம் வேலைக்கு ஆகுமா?
வாஷிங்டன்: இந்தியா மீதான 26% வரியை டிரம்ப் 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்திருந்த நிலையில், இதற்கான காலக்கெடு ஜூலை 9ம் தேதியுடன் முடிவடைகிறது. இப்படி இருக்கையில் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், ஆனால் இந்தியா தனது சந்தையை திறக்க வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்த டிரம்ப், "இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப் போகிறோம் என்று நினைக்கிறேன். அது வித்தியாசமான ஒப்பந்தமாக இருக்கும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் நாம் இந்திய வர்த்தக துறையில் போட்டியிட முடியும். தற்போது, இந்தியாவிற்குள் யாரையும் அனுமதிப்பதில்லை. நமக்காக இந்தியா இந்த கொள்கையை மாற்றும் என்று நினைக்கிறேன். அப்படி செய்தால், மிகக் குறைந்த வரிகளுடன் ஒப்பந்தம் போடப்படும்" என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் வர்த்தகம் செய்யும் வகையில் டிரம்புக்கு கதவை திறந்து விட வேண்டும் என்பதே இந்த பேட்டியின் சாராம்சம். அப்படி செய்வது இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும். அமெரிக்கா, 'டாலரில்' வர்த்தகம் செய்கிறது. டாலர், உலகின் சக்தி வாய்ந்த கரன்சி. அதில் குறைந்த அளவுக்கு லாபம் வந்தாலும், வணிகம் பாதிக்காது. டிரம்ப் பேச்சை கேட்டு அமெரிக்க பொருட்களுக்கு வரியை குறைத்தால் நமக்கு டாலரில் வரும் லாபம் குறைந்துவிடும். இது நமது அந்நிய செலாவணியை நேரடியாக பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
விஷயம் என்ன?
டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக கடந்த ஜனவரியில் பதவியேற்றார். ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே வரி விஷயம் தொடர்பாக பேசி வந்திருந்தார். அதாவது அமெரிக்காவுக்கும், அமெரிக்க பொருட்களுக்கும் மற்ற நாடுகள் எவ்வளவு வரியை விதிக்கிறதோ, அதே அளவுக்கான வரியை அமெரிக்காவும் விதிக்கும் என்று கூறியிருந்தார். ஆங்கிலத்தில் இதனை 'ரெசிப்ரோகல்' வரி என்று சொல்வார்கள். இந்த கொள்கைக்கு டிரம்ப் வைத்திருக்கும் பெயர், 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்'.
டிரம்பின் வரி கொள்கையால், அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த பாதிப்புகளை நாம் இரண்டு வகைகளில் எதிர்கொண்டோம்.
1.கூடுதல் வரி
2.ஜி.எஸ்.பி. அந்தஸ்து நீக்கம்
கூடுதல் வரி
இதில் முதல் விஷயத்தை பற்றி பார்போம். கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி, இந்திய பொருட்கள் அனைத்துக்கும் 26% வரியை டிரம்ப் விதித்திருந்தார். ஏற்கெனவே அனைத்து நாட்டு பொருட்களுக்கும் 10% அடிப்படை வரி இருக்கிறது. அந்த வகையில் இந்திய பொருட்களுக்கு 36% வரி போடப்பட்டிருந்தது. ஆனால் இந்த வரிக்கு இந்திய வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமெரிக்காவில் நேற்று வரை கிலோ 10 டாலருக்கு விற்கப்பட்ட இந்திய மாம்பழம், திடீரென 13.6 டாலருக்கு விலை உயர்ந்தால் யார் வாங்குவார்கள்?
வர்த்தக ஒப்பந்தம்
இப்படியே போனால் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியும் சூனியமாகிவிடும். எனவே மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையீடு செய்ய வேண்டும் என்று வணிகர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து 90 நாட்களுக்கு 26% வரி உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாகவும், அதற்குள் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என்று டிரம்ப் கூறியிருந்தார். இந்த 90 நாட்கள் அவகாசம் ஜூலை 9ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் இன்னும் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து இறுதி செய்யப்படவில்லை.
இதானல் மீண்டும் இந்தியா, 36% வரிக்குள் நுழைய இருக்கிறது. இது இந்திய வணிகர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்.
ஜி.எஸ்.பி. அந்தஸ்து நீக்கம்
இரண்டாவது விஷயத்தில் நாம் ஏற்கெனவே பலிகடா ஆகிவிட்டோம். அதாவது, கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவுக்கு அமெரிக்கா 'ஜிஎஸ்பி' எனும் அந்தஸ்தை வழங்கியிருந்தது. குறிப்பிட்ட சில இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் வரி விலக்கு இருக்கும். இதைதான் 'ஜிஎஸ்பி' என்று சொல்வார்கள். ஆனால் டிரம்ப் இந்த அந்தஸ்தை ரத்து செய்துவிட்டார். இதனால் இந்தியா நெருக்கடியை சந்தித்திருக்கிறது.
இப்படி இருக்கையில்தான் டிரம்பின் பேட்டி கவனம் பெற்றிருக்கிறது. நம்மால் டாலர் லாபத்தை விட்டு கொடுக்க முடியாது. அதற்கேற்ப பொருளாதார கொள்கையை அரசு வகுக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications