தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் வன்முறையை தூண்டும் டிரம்ப்... அதிபர் பதவியிலிருந்து நீக்க திட்டம்
வாஷிங்டன்: டிரம்பின் தூண்டுதலாலேயே நாடாளுமன்ற கட்டடத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டு, அவரை அதிபர் பதவியிலிருந்து நீக்கக் குடியரசு கட்சி முக்கிய தலைவர்கள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் புதிய அதிபரை எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு எதிராக டிரம்ப் ஆதரவாளர்கள், தலைநகர் வாஷிங்டனில் பேரணி நடத்தவுள்ளதாக அறிவித்தனர்.
இந்தப் பேரணி வன்முறையாக மாறியது. அமெரிக்கா நாடாளுமன்ற கட்டடத்தில் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

பதவி நீக்கம்
இந்நிலையில், இந்த வன்முறை முழுக்க முழுக்க டிரம்பின் தூண்டுதலாலேயே நடத்தப்பட்டுள்ளதாகப் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். டிரம்ப் இன்னும் சுமார் 13 நாட்களே அதிபர் பதவியில் இருப்பார் என்றாலும்கூட, அவர் அதிகாரத்தை வைத்திருக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அவசர ஆலோசனை
இதன் காரணமாக டிரம்பை அமெரிக்க அரசியல் சாசனப் பிரிவு 25ஐ பயன்படுத்தி, அதிபர் பதவியிலிருந்து நீக்குவது குறித்து டிரம்பின் சொந்த அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களே ஆலோசித்து வருகின்றனர். ஆனால், டிரம்பை நீக்க அமைச்சரவையில் போதுமான ஆதரவு இருக்குமா என்பது குறித்துத் தெளிவான தகவல் இல்லை. மேலும், அமெரிக்க மேல் சபை உறுப்பினர்களும் இதேபோன்ற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகரில் அவசர நிலை
இந்த வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து வாஷிங்டனில் பொது அவசரநிலையை 15 நாட்களுக்கு அமல்படுத்துவதாக வாஷிங்டன் மேயர் முரியல் பவுஸர் அறிவித்தார். புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற மறுநாள் வரை அவசரநிலை இருக்கும். இது குறித்து மேயர் கூறுகையில், "புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளைச் சீர்குலைக்கும் முயற்சியாகவே இந்த வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது. பதவியேற்பு நாளிலும் இதேபோன்ற வன்முறைச் சம்பவங்களை நடத்த அவர்கள் திட்டமிட்டிருக்கலாம்" என்றார்.

இந்த நாளை மறக்காதீர்கள்
நாடாளுமன்ற கட்டடத்தில் வன்முறையில் ஈடுபடுவதற்கு முன்னால், போராட்டக்காரர்களுக்கு வீடியோ ஒன்றை அதிபர் டிரம்ப் தனது டிவிட்டரில் வெளியிட்டிருந்தார். அதில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் வன்முறையைத் தூண்டும் வகையிலான பேச்சுக்களும் இருப்பதாகக் கூறி, அதை ட்விட்டர் நீக்கியது. மற்றொரு பதிவில் டிரம்ப், "அன்புடனும் நிம்மதியுடனும் வீட்டிற்குச் செல்லுங்கள். இந்த நாளை என்றென்றும் நினைவில் வையுங்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications