பைடன் அரசின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் ஜார்ஜியா தேர்தல்... முடிவுகள் என்ன
வாஷிங்டன்: புதிதாகப் பதவியேற்கும் பைடன் அரசின் பலத்தைத் தீர்மானிக்கும் ஜார்ஜியா தேர்தல் ஒன்றில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயகக் கட்சி, மற்றொன்றில் முன்னிலையில் உள்ளது.
அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் வரும் 20ஆம் தேதி பதவியேற்றுக்கொள்ள இருக்கிறார். அதேபோல நாட்டின் முதல் பெண் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவியேற்கவுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றம்
உலகின் பவர்புல்லான நாட்டின் அதிபராக இருந்தாலும்கூட, தான் விரும்பும் அனைத்துச் சட்டங்களையும் பைடனால் கொண்டு வர முடியாது. பைடன் அரசு முன்மொழியும் சட்டங்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேல் சபை, கீழ் சபை என இரண்டிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.

பெரும்பான்மை யாருக்கு
கடந்தாண்டு நவம்பர் மாதம், அமெரிக்க அதிபர் தேர்தலுடன் இரண்டு மேல் சபை உறுப்பினர்களுக்காக ஜார்ஜியா மாகாணத்திலும் தேர்தல் நடைபெற்றது. ஜோ பைடன் அரசு சுதந்திரமாகச் செயல்பட இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனென்றால், தற்போது 100 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க மேல் சபையில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 50 பேரும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 48 பேரும் உள்ளனர். இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெரும்பட்சத்தில் இரு கட்சிகளுக்கும் 50 உறுப்பினர்கள் இருப்பார்கள், அப்போது துணை அதிபர் கமலா ஹாரிஸின் வாக்கு பெரும்பான்மையை முடிவு செய்யும்.

ஜார்ஜியா தேர்தல்
நவம்பர் மாதம் நடைபெற்ற இவ்வளவு முக்கியமான ஜார்ஜியா மாகாண தேர்தலில் யாரும் வெற்றி பெறவில்லை. ஏனென்றால், ஜார்ஜியா மாகாண சட்டப்படி, மொத்தம் பதிவாகும் வாக்குகளில் 50% வாக்குகளைப் பெறுபவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்கள். நவம்பர் தேர்தலில் போட்டியிட்ட யாரும் 50% பெறவில்லை. இதனால் முதல் இரு வேட்பாளர்கள் மட்டும் பங்குபெறும் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

ஒரு இடத்தை கைப்பற்றிய ஜனநாயகக் கட்சி
இதில் 50% வாக்குகளைப் பெற்று ஜனநாயக கட்சியின் ரெவரெண்ட் ரபேல் வார்னக் என்ற கறுப்பினத்தவர் வெற்றி பெற்றார். ஜார்ஜியா வெள்ளையர்கள் அதிகமாக இருக்கும் ஒரு மாகாணமாகும். 200 ஆண்டுகளாக அமெரிக்கத் தேர்தல் வரலாற்றில் ஜார்ஜியா மாகாணத்தில் கறுப்பினத்தவர் வெற்றி பெறுவது இது மூன்றாவது முறையாகும்.

தொடரும் வாக்கு எண்ணிக்கை
மற்றொரு இடத்திற்காக தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜான் ஓசாஃப், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளரைவிட 0.22% அதிக வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளார். வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடியும்போது ஜான் ஓசாஃபே வெற்றி பெறுவார் என்று ஜனநாயக கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அவ்வாறு அவர் வெற்றி பெறும்பட்சத்தில், பைடன் அரசு விரும்பும் அனைத்து சட்டங்களையும் எளிதில் நிறைவேற்ற முடியும்.












Click it and Unblock the Notifications