தலைவன் வேற ரகம் பார்த்து உஷாரு.. அதெல்லாம் கண்முன்னே வந்து போகும்ல.. எலான் மஸ்க்கால் கலக்கம்
வாஷிங்டன்: டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக வரும் ஜனவரியில் பொறுப்பேற்க போகிறார். அவருடைய அரசில் திறமைத் துறை தலைமை பொறுப்பை வகிக்க போகிறார் எலான் மஸ்க். இத்துறையின் நோக்கம், அரசாங்கத்தின் அதிகப்படியான கட்டுப்பாடுகளை குறைப்பது, வீண் செலவுகளை குறைப்பது மற்றும் மத்திய ஏஜென்சிகளை மறுசீரமைப்பது குறித்த ஆலோசனைகளை வழங்குவது தான்.. எலான் மாஸ்க் நியமனத்தால் ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளார்கள்.. காரணம் கண் முன்னே வந்து போகும் ட்விட்டர் வரலாறு தான்.
இந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் வரும் ஜனவரி மாதம் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்க உள்ளார். டிரம்ப் வெற்றி பெற காரணமாக இருந்தது உலகின் பெரும்பணக்காரரான டெஸ்டா நிறுவனர் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி. இவர்கள் இருவரும் பிரச்சாரம் மற்றும் நிதியுதவி மற்றும் தேர்தல் ஒருங்கிணைப்பு போன்ற பல்வேறு பணிகளை செய்தனர். இதனால் இருவரையும் திறமைத் துறை தலைமை பொறுப்பில் டிரம்ப் அமர்த்தியுள்ளார்.

இவர்கள் நியமனம் பற்றி டொனால்டு டிரம்ப் கூறும் போது, "இந்த இரண்டு அற்புதமான அமெரிக்கர்களும் சேர்ந்து, எனது நிர்வாகத்திற்கு அரசாங்க அதிகாரத்துவத்தை அகற்றுவதற்கும், அதிகப்படியான விதிமுறைகளைக் குறைப்பதற்கும், வீண் செலவுகளைக் குறைப்பதற்கும், கூட்டாட்சி ஏஜென்சிகளை மறுசீரமைப்பதற்கும் வழி வகுக்கும் 'Save America' இயக்கத்திற்கு அவசியம்" என்று தெரிவித்தார்.
எலான் மஸ்க்கை பொறுத்தவரை டிரம்பிற்கு வெறும் பிரச்சாரத்திற்கு மட்டும் உதவி செய்யவில்லை.. அவரை அதிபராக்க தாராளமாக நிதியுதவி செய்தார். டிரம்ப்பை முன்னிறுத்தி எலான் மஸ்க் சமூக வலைதளங்களில் செய்த பிரச்சாரங்களை கவனித்திருந்தீர்கள் என்றால்.. இவர் ஒரு தொழில் அதிபரா இல்லை டிரம்ப்பின் செக்ரட்டரியா என்று கேட்கும் அளவிற்கு இருந்தது. இப்போது செய்த உதவிக்கு கைமாறாக எலான் மஸ்கிற்கு, தனது அரசில் திறமைத் துறை தலைமை பொறுப்பை வாரி வழங்கி உள்ளார் டிரம்ப்.
இந்த பொறுப்பை ஜனவரியில் எலான் மஸ்க் ஏற்பார் என தெரிகிறது. எலான் இந்த பதவிக்கு வந்ததால், வீண் செலவுகளை குறைக்க கடுமையான நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் அரசாங்கத்தின் அதிகப்படியான கட்டுப்பாடுகளை குறைக்கவும் செய்வார் என தெரிகிறது. அதேபோல் அமெரிக்க அரசின் ஏஜென்சிகளை மறுசீரமைப்பும் செய்வார். அதற்காக எந்த எல்லைக்கும் போகக்கூடியவர் தான் எலான் மஸ்க்.. சும்மா இருந்த ட்விட்டரில் தலைக்கு தலா மாதம் 567 வசூலித்து வருபவர் தான் எலான் மஸ்க். ட்விட்டரில் பிசினிஸ் பேஜ்களுக்கு 1133 வசூலித்து வருகிறார். அதேபோல் ட்விட்டரில் ஏராளமான ஊழியர்களை வேலையை விட்டு நீக்கினார். அதேபோல் ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியை கூட நீக்கிவிட்டார். பணத்தை எப்படி எல்லாம் சம்பாதிக்கலாம் என்பதை நன்கு அறிந்த எலான் மக்ஸ், குறைந்த காலத்திலேயே ட்விட்டரை பணம் காய்க்கும் மரமாக மாற்றியதுடன் பெயரையும் எக்ஸ் தளம் என்று மாற்றினார். எக்ஸ் தளத்தை வெறும் கருத்துரிமை ஊடகமாக மட்டும் இல்லாமல் பணம் சம்பாதிக்கும் இடமாக குறுகிய காலத்திலேயே மாற்றினார்.
எலான் மஸ்க்கை பொறுத்தவரை ரிஸ்க் எடுக்க தயங்காதவர்..துணிச்சலாக பல முடிவுகளை எடுப்பவர்.. மக்கள் தொகை அதிகரித்தால்தான் உலகம் நன்றாக இருக்கும் என்பதை நம்புபவர்.. எல்லாவற்றிலும் வித்தியாசமாக யோசிப்பதுடன் தயங்காமல் செயல்படுத்துவார். யாருக்காகவும் முடிவுகளில் இருந்து பின்வாங்க மாட்டார். எனவே நிர்வாக ரீதியாக அவர் எடுக்க போகும் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து கலக்கம் ஊழியர்களுக்கு இப்போதே வந்துவிட்டது.. எலான் மஸ்க்கின் ஆட்டம் வரும் ஜனவரியில் இருந்து ஆரம்பிக்க போகிறது. அவர் விரைவில் செயற்கைகோள் தொலைப்பேசி போன சேவையின் மூலம் இந்தியாவிலும் கால் பதிக்க போவது தான் ஹைலைட்.. எப்படி 2017ல் அம்பானியின் ஜியோ மேலே வந்ததோ, அதேபோல் 2026 ஏற்பட போகும் தொழில்நுட்ப புரட்சியில் எலான் மஸ்கின் நிறுவனம் டாப்பில் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.. அதேபோல் விரைவில் அவரது கார்கள் இந்தியாவில் வருவதும் உறுதி என்கிறார்கள்..












Click it and Unblock the Notifications