100, 200% வரி எல்லாம் பழசு! 3,521% வரியை அறிவித்த அதிபர் டிரம்ப்! இந்த முறை சிக்கியது யார் தெரியுமா!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் இஷ்டத்திற்கு உலக நாடுகள் மீது வரிகளை விதித்து வருகிறார். சீனா மீது அதிகபட்சமாக 245% வரியை விதித்தார் என்றே முதலில் செய்திகள் வெளியானது. ஆனால், டிரம்ப் நிர்வாகம் இப்போது 100, 200 சதவீதத்தை எல்லாம் தாண்டி சில பொருட்களுக்கு 3,521% வரை வரிகளை விதித்துள்ளதாம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தினசரி ஒரு அறிவிப்பு என உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். அவர் வெளியிடும் அறிவிப்புகள் சர்வதேச வர்த்தகத்தைக் கடுமையாகப் பாதிப்பதாக இருக்கிறது. டிரம்ப் நிர்வாகம் இப்போது அதிகபட்சமாக சீனா மீது மட்டும் 200 சதவீதத்திற்கு மேல் வரிகளை அறிவித்துள்ளது. மற்ற நாடுகள் மீதான ரெசிப்ரோகல் வரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தலைச் சுற்ற வைக்கும் வரி
இதற்கிடையே டிரம்ப் நிர்வாகம் இப்போது கூடுதல் வரிகளை அறிவித்துள்ளது. அதன்படி தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் மின் உற்பத்திப் பொருட்களுக்கு 3,521% சதவீதம் வரை புதிய வரிகளை விதித்துள்ளது. திங்கள்கிழமை இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டது.
சிக்கியது எந்த நாடுகள்?
கம்போடியா, வியட்நாம், மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகளின் உள்ள சோலார் மின் உற்பத்தி நிறுவனங்கள், சீனாவின் மானியங்களால் நியாயமற்ற முறையில் பயனடைந்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் மலிவான பொருட்களை அமெரிக்கச் சந்தைக்கு அனுப்பி வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் இதன் காரணமாகவே வரிகளை அறிவித்துள்ளதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய வரிகள், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே விதித்த 10 சதவீத அடிப்படை வரிகளுக்கு மேல் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலே கூறிப்பட்டுள்ள நாடுகளின் சீன நிறுவனங்கள் மிகப் பெரியளவில் முதலீடு செய்துள்ளதாகவும் அந்த நாடுகளில் இருந்து மலிவான சோலார் மின்சார உற்பத்திப் பொருட்கள் அமெரிக்காவுக்கு அதிகளவில் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக அமெரிக்க நிறுவனங்கள் நீண்ட காலமாகவே புகார் அளித்து வருகின்றன. இது தொடர்பாகச் சுமார் ஓராண்டாக நீண்ட விசாரணை நடந்த நிலையில், இப்போது டிரம்ப் நிர்வாகம் வரிகளை அறிவித்துள்ளன.
பின்னணி
அதிபர் டிரம்ப் முதல்முறை (2016-2020) அதிபராக இருந்தபோதே சீனா மீது வர்த்தகப் போரை நடத்தி, வரிகளை அறிவித்திருந்தார். இதனால் அப்போதே பல சீன நிறுவனங்கள் அமெரிக்க வரியில் இருந்து தப்பிக்கத் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் முதலீடு செய்தன. அதாவது இந்தப் பொருட்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து வந்தாலும், இதன் மூலம் லாபமடைவது சீன நிறுவனங்களாகவே இருந்து வந்தது. அதைக் கண்டுபிடித்தே இப்போது வரி அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த நாட்டிற்கு எவ்வளவு வரி?
அதிகபட்சமாக கம்போடியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் பொருட்களுக்கு 3,521 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. சீன நிறுவனங்களின் முதலீடு குறித்த அமெரிக்காவின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர கம்போடியா மறுத்துவிட்டது. இதன் காரணமாகவே கம்போடியாவுக்கு அதிகபட்ச வரி விதிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் வியட்நாமில் உள்ள நிறுவனங்களுக்கு 395.9 சதவீதம் வரை வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. தாய்லாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு 375.2 சதவீத வரிகளும், மலேசியாவில் உள்ள நிறுவனங்களுக்கு 34.4 சதவீத வரிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இறக்குமதி பாதிக்கப்படும்
கடந்தாண்டு மட்டும் வியட்நாம், தாய்லாந்து, கம்போடியா மற்றும் மலேசியாவிலிருந்து $12.9 பில்லியன் மதிப்புள்ள சோலார் மின்சார உபகரணங்களை அமெரிக்கா இறக்குமதி செய்திருந்தது. ஆனால், இப்போது டிரம்ப் தரப்பு இஷ்டத்திற்கு வரிகளை அறிவித்துள்ளதால் இந்த இறக்குமதி மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
அதேநேரம் இந்த வரிகளால் அமெரிக்க நிறுவனங்களுக்கு லாபம் தான். ஏனென்றால் இவ்வளவு வரி இருப்பதால் இறக்குமதி நிச்சயம் குறையும். அமெரிக்காவில் சோலார் மின்சாரத்திற்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், வரி விதிப்பால் அமெரிக்க நிறுவனங்களால் அந்த மார்கெட்டை பிடிக்க முடியும்.
யாருக்கு லாபம்?
இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த வர்த்தக அமைப்பின் துணைத் தலைவர் டிம் பிரைட்பில் கூறுகையில், "சந்தேகமே வேண்டாம். இது அமெரிக்க நிறுவனங்களுக்குக் கிடைத்துள்ள ஒரு மாபெரும் வெற்றி. பல காலமாகவே நமக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை தான் இந்த விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். சீன நிறுவனங்கள் அமெரிக்க வரியில் இருந்து தப்பத் தென்கிழக்கு நாடுகளில் இருந்து இயங்குகிறார்கள். அவர்கள் மலிவான சோலார் பேனல்களை அமெரிக்காவுக்கு அனுப்புகிறார்கள். இது அமெரிக்க நிறுவனங்களையும் அமெரிக்கத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது" என்றார்.
அமெரிக்காவின் டாப் சோலார் நிறுவனங்கள் இணைந்து பைடன் நிர்வாகத்திடம் இது குறித்து முறையிட்ட நிலையில், கடந்த ஆண்டு பைடன் நிர்வாகம் இந்த விஷயத்தில் விசாரணையைத் தொடங்கியது. ஓராண்டு நடந்த தீவிர விசாரணைக்கு பிறகே டிரம்ப் நிர்வாகம் இப்போது வரிகளை அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப் பல சர்ச்சை அறிவிப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டு வருகிறார். முதலில் ஏப்ரல் தொடக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் வரி விதிக்கப்போவதாக ஒரு பெரிய லிஸ்ட்டையே வெளியிட்டார். அதில் உலகின் முன்னணி நாடுகள் பலவற்றுக்கும் வரிகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.
சீனா
ஆனால், ஒரே வாரத்தில் மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மிகப் பெரிய ஒரு யூடர்னை போட்டார். அதாவது ரெசிப்ரோக்கல் வரியை அடுத்த 90 நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக அறிவித்தார். அதேநேரம் சீனா மீதான வரிகளை மட்டும் அதிகரித்தார். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தபோது அமெரிக்காவின் டிரஷரி பாண்டுகள் அதிகளவில் விற்கப்பட்டன. அதாவது அமெரிக்க டிரஷரி துறை வெளியிட்ட கடன் பத்திரங்கள் அதிகம் விற்கப்பட்டதால், அதன் மதிப்பு குறைந்தது. இதனால் அமெரிக்க அரசு அதிக வட்டி தர வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அமெரிக்க டிரஷரி பாண்டுகளில் குறிப்பிட்ட சதவிகிதம் சீனா வசமே இருக்கிறது. இதனால் சீனா தான் பாண்டுகளை விற்று அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்து இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்தியா
மறுபுறம் டிரம்ப் 90 நாட்கள் ரெசிப்ரோக்கல் வரியை நிறுத்திவைத்திருக்கும் நிலையில், அதற்குள் அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தத்தைப் போட உலக நாடுகள் முயன்று வருகிறது. குறிப்பாக இந்தியா அது தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்தியா உடனான டீலை அமெரிக்கா இறுதி செய்யும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications