வாக்கு எண்ணிக்கையை நிறுத்த டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகளை தடுத்து நிறுத்துவோம்: ஜோ பிடன்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தடுத்து நிறுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் சட்ட ரீதியாக மேற்கொள்ளும் முயற்சிகளை தடுத்து நிறுத்துவோம் என ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியை நெருங்கிவிட்டார் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன். தோல்வியை தழுவி வரும் அதிபர் டொனால்ட் டிரம்ப், வாக்குப் பதிவில் மோசடி நடைபெற்று வருவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

அத்துடன் பல மாகாண வாக்கு எண்ணிக்கையை நிறுத்த கோரி நீதிமன்றங்களில் அடுத்தடுத்து வழக்குகளையும் தொடர்ந்து வருகிறார் டிரம்ப். ஆனால் நீதிமன்றங்கள் மூலமாக டொனால்ட் டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகள் அவருக்கு சாதகமாக இருக்கவில்லை.

இதனால் கடும் விரக்தி அடைந்திருக்கும் டொனால்ட் டிரம்ப், தேர்தலில் எங்களது வெற்றியை ஜனநாயக கட்சி திருட பார்க்கிறது என பகீர் குற்றம்சாட்டி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதனிடையே வெற்றிக் கோட்டை தொடும் நிலையில் உள்ள ஜோபிடன் ஒரு ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

வாக்கு எண்ணிக்கையை தடுப்பதற்கு டொனால்ட் டிரம்ப் நீதிமன்றங்கள் மூலம் முயற்சித்து வருகிறார். நீண்ட தேர்தல் நடைமுறையை பாதுகாக்கும் வகையில் அனைவரும் அணி திரண்டிருக்கிறோம். உங்களது உதவி தேவை என கூறியுள்ளார்.
இதனிடையே நெவடா மாகாணத்தில் 3,062 வாக்குப் பதிவு மோசடிகள் நடைபெற்றுள்ளதாக டிரம்ப்பின் குடியரசு கட்சி புகார் அளித்திருக்கிறது. நெவடா மாகாணத்தைவிட்டு வெளியேறிவிட்ட பலரும் சட்டவிரோதமாக தேர்தலில் வாக்களித்துள்ளனர் என்பது குடியரசு கட்சியின் புகார்.












Click it and Unblock the Notifications