இந்தியாவை தொடர்ந்து..சீனாவின் 8 மொபைல் 'ஆப்'களுக்கு 'ஆப்பு' வைத்த டிரம்ப்...தடை விதித்து உத்தரவு!
வாஷிங்டன்: அலிபே மற்றும் வி சாட் பே உள்ளிட்ட 8 சீன செயலிகள் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள தடைசெய்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சீனாவின் டிக்டாக் மற்றும் வி சாட் செயலிகளுக்கு டிரம்ப் தடை விதித்திருந்த நிலையில், மேலும் சில செயலிகளின் தடை சீனாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் வல்லரசு நாடாக திகழும் அமெரிக்காவுக்கும், உலக அரங்கில் தன்னை பெரும் சக்தியாக நிலைநாட்டிக்கொள்ள முயற்சிக்கும் சீனவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது.சீனாவுக்கு பொருளாதார தடை விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்த நாட்டு பொருட்களுக்கு அதிக வரி விதித்தார். பதிலுக்கு சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதித்தது.
தொடர்ந்து கொரோனா வைரஸ் வந்தபிறகு இரு நாடுகளின் மோதல் உச்சம் தொட்டது. சீனா யூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸை உலக நாடுகளுக்கு சீனா வேண்டுமென்றே பரப்பி விட்டதாக அமெரிக்கா நேரடியாக குற்றம் சாட்டியது. சீனாவும் அமெரிக்காவை தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.
இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சீனாவின் பிரபலமான வீடியோ செயலியான டிக்டாக் மற்றும் வி சாட் செயலிகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது. இந்த நிலையில் சீனாவின் அலிபே, கேம்ஸ்கேனர், க்யூ கியூ வாலட், ஷேர் இட், டென்சென்ட் க்யூ கியூ, விமேட், வி சாட் பே மற்றும் டபிள்யூபிஎஸ் ஆபீஸ் ஆகிய 8 சீன செயலிகளுக்கு அதிபர் டிரம்ப் அதிரடியாக தடை விதித்துள்ளார். அடுத்த 45 நாட்களில் இந்த தடை நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உருவாக்கப்பட்ட மற்றும் சீனாவால் கட்டுப்படுத்தப்படும் செயலிகளின் பரவலால் ஏற்படும் தேசிய அவசரநிலையை சமாளிக்க இந்த நடவடிக்கை தேவை என்று டிரம்பின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 200'க்கும் மேற்பட்ட சீன செயலிகளை தடை செய்ய இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளை மேற்கோளிட்டு டிரம்பின் அறிவிப்பு வந்துள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையால் சீனாவுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications