மோடியை புறக்கணிக்கும் டிரம்ப்? பதவியேற்பு விழாவுக்கு இன்னும் அழைப்பு வரவில்லையாமே.. என்ன காரணம்?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்க உலக தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடிக்கு இன்னும் அழைப்பு வரவில்லை என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மோடியை, டொனால்ட் டிரம்ப் புறக்கணிக்கிறாரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். இதில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். கமலா ஹாரிஸ் தோல்வியடைந்தார்.

இதையடுத்து நாட்டின் அடுத்த அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ளார். அமெரிக்காவை பொறுத்தமட்டில் அதிபர் தேர்தலில் வென்றவுடன் புதிய அதிபர் பொறுப்பேற்க மாட்டார். பிரச்சனையின்றி நிர்வாகம் நடத்துவதற்கு தேவையான வகையில் நியமனங்கள் உள்ளிட்ட பணிகளை செய்வார்.
அதன்பிறகு 2 மாதங்களுக்கு பிறகு ஜனவரி 20ம் தேதி நாட்டின் அதிபராக பொறுப்பேற்பார். அந்த வகையில் அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் 20ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். இந்த விழா என்பது வாஷிங்டன் டிசியில் நடைபெற உள்ளது. அன்று முதல் டொனால்ட் டிரம்ப் 4 ஆண்டுகள் வரை அமெரிக்க அதிபராக நீடிப்பார். இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்பு விழாவில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
விழாவில் பங்கேற்பதற்காக பிற நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு, அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா பத்திரிகைகள் தற்போது எந்தெந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த விழாவில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் பங்கேற்க உள்ளார். இதனை ஜோ பைடனே உறுதி செய்துள்ளார். அதேபோல் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது இதனை ஜி ஜின்பிங் தரப்பு உறுதி செய்துள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே பிரச்சனை இருந்தாலும் கூட ஜி ஜின்பிங்கிற்கு அழைப்பு சென்றுள்ளது. ஆனால் ஜி ஜின்பிங்கிற்கு பதில் மூத்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக சிஎன்என் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதேபோல் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, எல் சால்வடார் அதிபர் நயின் புக்கலே, அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலேய், ஹங்கேரி நாட்டின் பிரதமர் விக்டர் ஆர்பன் உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர். இதுதவிர உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியும் விழாவில் பங்கேற்க உள்ளார். இதுபற்றி ஜெலன்ஸ்கி, ‛‛டிரம்ப் தனது அதிகாரத்தில் பலமாக இருக்கும்போது போர் என்பது முடிவுக்கு வரும். டிரம்ப் கணிக்க முடியாத அதேவேளையில் பலமாக தலைவராக இருப்பார் என்று நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு டிரம்ப் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று தற்போது வரை எந்த அதிகாரிகளும் உறுதியான பதிலை சொல்லவில்லை. அதேபோல் டொனால்ட் டிரம்ப் சார்பில் இருந்தும் பிரதமர் மோடிக்கு இன்று வரை அழைப்பு என்பது வரவில்லை என்று கூறப்படுகிறது.
அதாவது டிரம்ப் விழாவில் பங்கேற்கும் அழைப்பு விடுக்கப்பட்ட தலைவர்கள் என்று வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகி உள்ள தலைவர்களின் லிஸ்ட்டில் பிரதமர் மோடியின் பெயர் இல்லை. இதனால் டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடியை புறக்கணிக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் இன்னும் விழாவுக்கு நாட்கள் உள்ளதால் டொனால்ட் டிரம்ப் சார்பில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படலாம் என்றம் சொல்லப்படுகிறது.
இதுதவிர டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவில் உலக பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க், இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி உள்பட பிரபல நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications