கொரோனாவுக்கு மருந்து, தடுப்பூசி.. ஆஹா அங்கே ஒளி தெரிகிறது.. டொனால்ட் ட்ரம்ப் ஹேப்பி
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் சிகிச்சை விவகாரத்தில், இருண்ட குகை முடிவடைந்து, அந்தப் பக்கம் வெளிச்சம் தெரிய ஆரம்பித்துள்ளது என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்காவில், அதிலும் குறிப்பாக நியூயார்க் மாகாணத்தில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
பல்லாயிரக்கணக்கான மக்களை பலிகொடுத்து அமெரிக்கா பெரும் துயரத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான், நம்பிக்கை தரும் வார்த்தை ஒன்றை கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
நெருங்கிவிட்டோம்
அவர் கூறுகையில், கொரோனா வைரசுக்கு எதிராக மருந்து கண்டு பிடிப்பது தொடர்பாக சுமார் 10 வெவ்வேறு வகையான டிரையல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் சில பரிசோதனைகள் வெற்றிகரமாக அமையும் வாய்ப்பு கண்ணுக்கு தெரிகிறது. அவர்கள் சில நடைமுறையை முடித்தாக வேண்டியுள்ளது. இருப்பினும் அதை வேகமாக அவர்கள் செய்து கொண்டிருப்பதாக எனக்கு தகவல் கிடைத்து உள்ளது. இவ்வாறு டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனம்
உலக சுகாதார அமைப்பின் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் திங்களன்று தெரிவித்த கருத்துக்களை டிரம்ப் எதிரொலித்துள்ளார். கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் உருவாக்கும் ஆராய்ச்சி நம்பமுடியாத வேகத்தில் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்று டெட்ரோஸ் அதோனாம் கூறியிருந்தார்.
ஆய்வுகள்
70 க்கும் மேற்பட்ட நாடுகள் WHOன் சோதனையில் இணைந்துள்ளன என்றும், சுமார் 20 நிறுவனங்கள் தடுப்பூசியை உருவாக்க போட்டியிடுகின்றன, என்றும் டெட்ரோஸ் அதோனாம் கூறியிருந்தார். ஜெனீவாவில் உள்ள WHO தலைமையகத்தில் இதுகுறித்து டெட்ரோஸ் அதோனாம் கூறுகையில், "வைரஸ் மரபணு ஜனவரி தொடக்கத்தில் வரைபடமாக்கப்பட்டது மற்றும் உலகளவில் பகிரப்பட்டது, இது சோதனைகளை உருவாக்க மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சி தொடங்க உதவியது" இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
மனித பரிசோதனை
கொரோனாவை தடுப்பதற்காக ஒரு தடுப்பூசியை உருவாக்க அமெரிக்க சுகாதார அதிகாரிகள், பயோடெக் நிறுவனமான மாடர்னாவுடன் இணைந்து விரைவாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மார்ச் 16 ஆம் தேதி தடுப்பூசி மூலம் அவர்கள் முதல் மனித சோதனைகளைத் தொடங்கினர்.