ரூ.1.33 லட்சம் கோடிக்கு ஆப்பு.. சீனாவை குறிவைத்து டிரம்ப் போடும் அடுத்த வரி! ரெடியாகும் அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிநாடுகளை குறிவைத்து அதிகப்படியான வரிகளை விதித்து வருகிறார். இதன் அடுத்தக்கட்டமாக சீனாவை குறிவைத்து அதிகப்படியான வரிகளை விதிக்க உள்ளதாக டொனால்ட் டிரம்ப் வார்னிங் செய்துள்ளார். இது நடக்கும் பட்சத்தில் சீனாவுக்கு ரூ.1.33 லட்சம் கோடி மதிப்பிலான அமெரிக்க மார்க்கெட் காலியாகும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளுக்கு வரிகளை விதித்து வருகிறார். நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை டிரம்ப் விதித்துள்ளார். இந்த வரி அமலுக்கு வந்துவிட்டது. இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சரிவை தொடங்கி உள்ளது.

அதேபோல் டிரம்ப் தனது பரமஎதிரியான சீனாவையும் விட்டு வைக்கவில்லை. டிரம்ப் பதவியேற்றது முதல் சீனாவுக்கு 185 சதவீத வரிகளை விதித்தார். இதற்கு பதிலடியாகவும் சீனாவும், அமெரிக்காவுக்கு 175 சதவீத வரிகளை விதித்தது. இதனால் இருநாடுகள் இடையே வர்த்தக போர் ஏற்பட்டது.
இருப்பினும் இருநாடுகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதனால் தற்போது வரை அமெரிக்காவின் 30 சதவீத வரி மட்டுமே சீனா மீது அமலுக்கு வந்துள்ளது. மற்ற வரிகளை தற்காலிகமாக டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். இருப்பினும் இருநாடுகள் இடையே தொடர்ந்து வர்த்தகம் சார்ந்த மோதல் உள்ளது. இப்படியான சூழலில் தான் டிரம்ப் அமெரிக்காவில் உள்ள சீனாவின் பர்னிச்சர் மார்க்கெட்டை காலி செய்ய முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக டிரம்ப் தனது ட்ரூத் வலைதள பக்கத்தில், ‛‛சீனா மற்றும் பிறநாடுகளிடம் அமெரிக்காவின் வடக்கு கரோலினா தனது பர்னிச்சர் பிசினஸை மொத்தமாக இழந்து நிற்கிறது. கிரேட் அகெயின் என்ற அடிப்படையில் அமெரிக்காவில் பர்னிச்சர் உற்பத்தி செய்யாமல் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு அதிகப்படியான வரிகளை விதிக்க முடிவு செய்துள்ளேன்'' என்றார்.
அமெரிக்காவை எடுத்து கொண்டால் வடக்கு கரோலினா பகுதியில் பர்னிச்சர் நிறுவனங்கள் உள்ளன. தற்போது சீனா உள்பட பிற நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பர்னிச்சர்களால் அங்குள்ள பர்னிச்சர் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. இதனை சரிசெய்யும் வகையில் டிரம்ப் இந்த முடிவை அறிவித்துள்ளார்.
டிரம்ப் தனது இந்த முடிவை செயல்பாட்டுக்கு கொண்டு வரும்போது சீனாவுக்கு பெரிய அடி கிடைக்கும். ஏனென்றால் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிகளவில் பர்னிச்சர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சீனாவில் இருந்து ஆண்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பர்னிச்சர்களில் 30 சதவீதம் அமெரிக்காவுக்கு தான் செல்கிறது. அமெரிக்கா என்பது சீனாவின் பர்னிச்சர் மார்க்கெட்டுக்கு முக்கிய நாடாக உள்ளது.
கடந்த 2023ம் ஆண்டில் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு 15 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் கோடி) அளவுக்கு பர்னிச்சர் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதேபோல் 2024 ம் ஆண்டில் முதல் 7 மாதங்கள் வரை 8.4 பில்லியன் டாலர் (ரூ.745 கோடி) அளவுக்கு சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு பர்னிச்சர் அனுப்பி வைக்கப்பட்டது. இப்படியான சூழலில் தான் டிரம்ப் பர்னிச்சர் துறையை குறிவைத்து வரி விதிக்கும் பட்சத்தில் அது சீனாவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications