சோதனை மேல் சோதனை.. துருக்கியில் நள்ளிரவு மீண்டும் நிலநடுக்கம்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
துருக்கியில் நள்ளிரவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானது.
வாஷிங்டன்: துருக்கியில் நள்ளிரவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
துருக்கியின் தென்கிழக்கில் இருக்கும் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய தொழில் நகரம் காசியான்டெப். இந்த நகரத்தை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியா குலுங்கியது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் இரு நாடுகளிலும் கடுமையான பொருட்சேதமும் உயிர்சேதமும் ஏற்பட்டது.

34 ஆயிரம் பேர் பலி
குறிப்பாக துருக்கியில் 10 மாகாணங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் ஆகின. வீடுகளும் இடிந்து விழுந்தன. கட்டிட இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கிக் கொண்டனர். கட்டிட குவியல்களை தோண்ட தோண்ட சடலங்கள் கண்டெடுக்கப்படுவது பெரும் துயரமாக மாறியுள்ளது. சிரியா மற்றும் துருக்கி ஆகிய இருநாடுகளையும் சேர்த்து நிலநடுக்கத்திற்கு பறி போன உயிர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மீட்பு பணிகள் தீவிரம்
நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் கடந்து விட்ட போதிலும் அங்கு இன்னமும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் சர்வதேச ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. இந்தியாவும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவை துருக்கிக்கு அனுப்பி வைத்துள்ளது. வீடுகளை இழந்த மக்கள் தற்காலிக டெண்ட்கள் மற்றும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் மருத்துவ பொருட்களையும் வழங்க சர்வதேச நாடுகள் முன்வந்துள்ளன.

இருமடங்காக அதிகரிக்க வாய்ப்பு
துயரமான நிலையை சந்தித்து இருக்கும் துருக்கிக்கு பல்வேறு பக்கங்களிலும் இருந்து உதவிகள் குவிந்து வருகின்றன. துருக்கியில் மீட்பு பணிகளும் ஒருபக்கம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. துருக்கியில் மட்டுமே பலி எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், இருநாடுகளிலும் பலி எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் அவை கவலை தெரிவித்துள்ளது. அதாவது பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டும் என அச்சம் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம்
துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பிறகு பங்கு பல முறை பின் அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால், மீட்பு பணிகளில் கூட தொய்வு ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டு ஒருவாரம் கடந்து விட்ட நிலையில் அங்கு நள்ளிரவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் தெற்கு நகரமான கஹ்ராமன்மரஸ் பகுதியில் நள்ளிரவு 00.03 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது. இதனால் மக்கள் மீண்டும் பீதி அடைந்தனர். ஏற்கனவே நிலநடுக்கத்தால் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வரும் நிலையில் துருக்கியில் அடுத்தடுத்து இயற்கை கொடுக்கும் சோதனை மக்களை அச்சத்தில் உறைய வைத்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications