என்னது வழக்கு போடுறீங்களா? ட்விட்டர் நிறுவனத்திடம் பொங்கிய எலான் மஸ்க்.. என்ன செய்தார்?
வாஷிங்டன்: ட்விட்டரை சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதாக அறிவித்துவிட்டு பின்னர் பின்வாங்கிய எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், ட்விட்டர் நிறுவனம் மீதும் எலான் மஸ்க் வழக்கு தொடுத்துள்ளார்.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங் ஆகிய நிறுவனங்களின் தலைவரும் உலகின் நம்பர் 1 பணக்காரருமான எலான் மஸ்க், கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்தார்.
முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரை சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலர் தொகைக்கு வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்து இருந்தார். ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான வேலைகளும் முழு வீச்சில் நடைபெற்று வந்தன

4 மடங்கு போலி கணக்குகள்
அப்போது அவர் சில குறிப்பிட்ட ட்விட்களுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் தன்னிடம் இருப்பதாகவும் எலான் மஸ்க் அறிவித்து இருந்தார். ட்விட்டரை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், ட்விட்டர் நிறுவனம் கூறியதை விட 4 மடங்கு போலி கணக்குகள் இருப்பதாகவும், அது பற்றிய முழுமையான தகவல்களை தராததால், ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிட போவதாகவும் எலான் மஸ்க் கடந்த 8 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். எலான் மஸ்கின் இந்த அறிவிப்பால் டிவிட்டர் நிறுவன பங்குகள் 7 சதவீதம் சரிந்தன.

எலான் மஸ்குக்கு எதிராக வழக்கு
44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்தது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. எலான் மஸ்கின் இந்த திடீர் முடிவால் அதிருப்தி அடைந்த ட்விட்டர் நிறுவன தலைவர் பிரட் டெய்லர், எலான் மஸ்க்கிற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார். இதன்படி, எலான் மஸ்க்கிற்கு எதிராக டிவிட்டர் நிறுவனம் தரப்பில் வழக்கும் தொடரப்பட்டது. ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை வரும் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் என்று டெலாவேர் கோர்ட் ஆஃப் சான்சரி நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

164 பக்கங்கள் கொண்ட வழக்கு
இந்த நிலையில், ட்விட்டருக்கு போட்டியாக எலான் மஸ்க் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 164 பக்கங்கள் கொண்ட வழக்கு ஆவணத்தில் எலான் மஸ்க் தரப்பு என்ன சொல்லியிருக்கிறது என்ற விவரம் வெளியாகவில்லை. எனினும், நீதிமன்ற விதிகளின் படி, விரைவில் வழக்கின் விவரங்கள் வெளியிடப்படும். எலான் மஸ்க் வழக்கு தொடர்ந்துள்ளது குறித்து டிவிட்டர் நிறுவனம் உடனடியாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

லூய்கி கிறிஸ்போ வழக்கு
இதுபோக, ட்விட்டர் நிறுவனத்தின் பங்குதாரர்களால் வெள்ளிக்கிழமை எலான் மஸ்கிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அதில், ''எலான் மஸ்க் ஒப்பந்தத்தை முடிக்க உத்தரவிட வேண்டும் என்றும், டிவிட்டரில் 9.6 சதவீத பங்குகளை கொண்டிருந்த எலான் மஸ்க், நிறுவனத்தை முழுமையாக வாங்குவதாக அறிவித்து இருந்ததால், நிறுவனத்தின் பல முடிவுகளில் அவருக்கு வீட்டோ அதிகாரம் கிடைத்ததாகவும் ஆனால், நம்பிக்கையை மீறி செயல்பட்டதால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை டிவிட்டரில் 5,500 பங்குகளை வைத்திருக்கும் லூய்கி கிறிஸ்போ என்பவர் தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications