எலான் மஸ்க்கை இறக்கிய டிரம்ப்.. மத்திய கிழக்கில் இனி போர் இருக்காது? ஈரான் தூதருடன் ரகசிய சந்திப்பு!
வாஷிங்டன்: மத்திய கிழக்கில் ஒரு பக்கம் பதற்றம் தொடர்ந்து வருகிறது. அங்குள்ள ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எப்போதும் நல்லுறவு இருந்ததே இல்லை. இதற்கிடையே இது தரப்பிற்கும் இடையே பதட்டத்தைத் தணிக்கும் முயற்சியாக டிரம்ப்புடன் நெருங்கிய நட்புறவு கொண்ட கோடீஸ்வரரான எலான் மஸ்க், ஐநா சபைக்கான ஈரான் தூதரைச் சந்தித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மத்திய கிழக்கில் பல மாற்றங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் ஈரான் இடையே எப்போது வேண்டுமானாலும் நேரடியாகப் போர் வெடிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இரு தரப்பிற்கும் இடையே மோதல் வெடித்தால் அது மத்திய கிழக்கைத் தாண்டி உலகெங்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.

மத்திய கிழக்கைப் பொறுத்தவரை அங்கு எப்போதும் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டையே அமெரிக்கா எடுக்கும். மேலும், அங்குள்ள ஈரான் நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே இதுவரை மோதல் போக்கே நிலவி வந்து இருக்கிறது.
சந்திப்பு: இதற்கிடையே டிரம்பின் நிர்வாகத்தில் இடம்பெறப் போகும் கோடீஸ்வரரான எலான் மஸ்க் திடீரென இப்போது ஐநா சபைக்கான ஈரான் தூதர் சந்தித்துள்ளதாக அமெரிக்காவில் வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இரு தரப்பிற்கும் இடையே நடந்த இந்த சந்திப்பு பாசிட்டிவாகவே இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எலான் மஸ்க் அல்லது ஈரான் தரப்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கேள்விக்கும் ஈரான் தூதரகம் பதில் அளிக்க மறுத்துவிட்டது. ஈரான் நாட்டுடன் ராஜதந்திர ரீதியில் உறவை ஏற்படுத்த டிரம்ப் எந்தளவுக்குத் தீவிரமாக இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது.
டிரம்ப் அணுகுமுறை: டிரம்ப் இதற்கு முன்பு அதிபர் பதவியில் இருந்த போது ஈரான் உடன் மோதல் போக்கையே கையாண்டார். குறிப்பாக ஒபாமா காலத்தில் ஈரான் நாட்டுடன் அணுசக்தித் திட்டம் போடப்பட்டு இருந்த நிலையில், அதை டிரம்ப் ரத்து செய்தார். மேலும், ஈரான் மீது அதிகபட்ச அழுத்தத்தைத் தொடர்ந்து கொடுத்து வந்தார். மேலும், உலகின் மற்ற நாடுகள் ஈரானிடம் இருந்து எண்ணெய்யை வாங்க வேண்டாம் என்று கூட கட்டாயப்படுத்தினார்.
ஆனால், இந்த முறை டிரம்பின் அணுகுமுறையில் மாற்றம் இருக்கிறது. தேர்தல் சமயத்திலேயே அவர் மத்திய கிழக்கில் தன்னால் மட்டுமே அமைதியைக் கொண்டு வர முடியும் என்று கூறி வந்தார். சொன்னபடியே அதிபர் தேர்தலில் வென்றவுடன் தனது வேலையை ஆரம்பித்துவிட்டார் டிரம்ப். சில காலத்தில் மத்திய கிழக்கில் அதிரடி மாற்றங்கள் நடக்கத் தொடங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தளவுக்குச் செல்வாக்கு: அதேபோல டிரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்கிற்கு எந்தளவுக்குச் செல்வாக்கு இருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது. டிரம்ப் அதிபர் தேர்தலில் வென்றவுடன் உலக நாடுகளின் தலைவர்கள் அவரை தொடர்பு கொண்டு பேசியிருந்தார். அப்போது எலான் மஸ்க்கையும் டிரம்ப் உடன் வைத்துக் கொண்டதாகக் கூறப்பட்டது. இந்தச் சூழலில் மீண்டும் மிக முக்கிய பேச்சுவார்த்தைக்கு எலான் மஸ்கையே டிரம்ப் அனுப்பியுள்ளார். அவர் மீது டிரம்ப் எந்தளவுக்கு நம்பிக்கை வைத்து இருக்கிறார் என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications