பெரிய சிக்கல்! ஆபாச நடிகைக்கு பணம்- டிரம்ப் குற்றவாளி என தீர்ப்பு! இனி தேர்தலில் போட்டியிட முடியுமா?
வாஷிங்டன்: ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் என்பவருக்குப் பணம் கொடுத்த விவகாரத்தில் டிரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகி உள்ளதாக அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவின் 45ஆவது அதிபராகக் கடந்த 2017 முதல் 2021 வரை இருந்தவர் டிரம்ப்.. இவர் அதிபராக இருந்த போதே ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியவர். 2020 அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த போதும் அதை ஒப்புக் கொள்ளாமல் கலவரத்தை ஏற்படுத்த முயன்றதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் இருக்கிறது.

அதிபர் பதவியில் இல்லை என்றாலும் கூட இவரை சுற்றிலும் பல சர்ச்சைகள் நிலவி வருகிறது. இது குறித்துப் பல வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது. அப்படி தான் ஆபாச நடிகை பணம் கொடுத்த வழக்கில் இவருக்கு எதிராக இப்போது தீர்ப்பு வந்துள்ளது.
டிரம்ப்: டிரம்பிற்கு கடந்த 2005ஆம் ஆண்டிலேயே மெலனியா என்ற பெண்ணுடன் திருமணமாகி இருந்தாலும் கூட அதன் பிறகும் அவர் பல பெண்களுடன் உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்படி தான் இவர் ஒரு முறை ஆபாச நடிகையான ஸ்டார்மி டேனியல்ஸ் உடன் நெருக்கமாக இருந்துள்ளார். இருப்பினும், கடந்த 2016 அதிபர் தேர்தல் சமயத்தில் இது குறித்து பொது வெளியில் பேசக் கூடாது என்று ஸ்டார்மி டேனியல்ஸ் உடன் டிரம்ப் ஒப்பந்தம் போட்டார்.
மேலும், அதற்காக டிரம்ப் $130,000 டாலர் கொடுத்துள்ளார். அமெரிக்க சட்டப்படி இதுபோல ஒப்பந்தம் போடுவதும் பணம் கொடுப்பதும் எல்லாம் சட்ட விரோதமானது இல்லை. ஆனால், டிரம்ப் அதற்குத் தேர்தல் நிதியைப் பயன்படுத்தினார் என்பதே குற்றச்சாட்டாகும். இது தொடர்பான வழக்கு டிரம்பிற்கு தலைவலியாக மாறியது. இந்த விவகாரத்தில் அவர் நீதிமன்றத்திலும் ஆஜராக வேண்டி இருந்தது.
குற்றவாளி: இந்த விவகாரத்தில் டிரம்ப் மீது மொத்தம் 34 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருந்த நிலையில், அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் டிரம்ப் குற்றவாளி என நியூயார்க் ஜூரி தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விவரங்கள் வரும் ஜூலை 11ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தீர்பை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப் சாடல்: மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், அப்போது டிரம்பும் அங்கு அமர்ந்திருந்தார். இந்த தீர்ப்பு வந்தவுடன் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்த தீர்ப்பு மோசடியான தீர்ப்பு என்று விமர்சித்தார். மேலும், அங்கு இந்தாண்டு நவ. மாதம் தேர்தல் நடக்கும் நிலையில், அப்போது பொதுமக்கள் உண்மையான தீர்ப்பைத் தருவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
தடை இல்லை: இந்தாண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருக்கும் டிம்பிற்கு இந்த நீதிமன்ற தீர்ப்பு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரம் அமெரிக்க நாட்டு சட்டப்படி ட்ரம்பிற்கு சிறைத் தண்டனையே விதிக்கப்பட்டாலும் கூட அது அதிபர் தேர்தலில் போட்டியிடுவதைத் தடை செய்யாது. அவர் சிறையில் இருந்தாலும் கூட அங்கிருந்தபடியே அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அதிபர் பைடன் தரப்பு வரவேற்றுள்ளது. அமெரிக்க ஜனநாயகத்திற்கு டிரம்ப் அச்சுறுத்தலாக இருப்பதாகச் சாடிய பைடன் தரப்பு, இந்தத் தீர்ப்பு சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை என்பதைக் காட்டியுள்ளதாகவும் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications