சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. குலுங்கிய பப்புவா நியூ கினியா! ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்.. மக்கள் பீதி
வாஷிங்டன்: பப்புவா நியூ கினியா நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் குலுங்கின. 5 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தென்மேற்கு பசிபிக் நாடுகளில் ஒன்று பப்புவா நியூ கினியா.. நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் புவியியல் அமைப்பு கொண்ட இடத்தில் பப்புவா நியூ கினியா நாடு அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது என்பது சர்வ சாதாரணமான விஷயமாக பார்க்கப்படுகிறது. எனினும், அவ்வப்போது சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு மக்களை பீதியில் ஆழ்த்திவிடுகிறது.

அந்த வகையில், பப்புவா நியூ கினியாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 என்ற அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் அங்கு வீடுகள் குலுங்கின. பப்புவா நியூ கினியாவில் உள்ள கிழக்கு செபிக் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த பகுதியில் ஏற்கனவே கனமழை பெய்து வீடுகள் வெள்ளத்தில் மிதந்தன. வெள்ள மீட்பு பணிக்காக மீட்பு குழுவினரும் அங்கு முகாமிட்டு இருந்தனர். அப்போது ஏற்பட்ட சக்தி வாயந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் நிலநடுக்கத்தால் 5 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அங்குள்ள அதிகாரிகள் கூறினர். ஏற்கனவே முழங்கால் அளவுக்கு சூழ்ந்துள்ள வெள்ளத்தில் மிதந்த வீடுகள், நிலநடுக்கத்தால் கடுமையாக உருக்குலைந்து கிடக்கும் காட்சிகள் அங்குள்ள சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. நிலநடுக்கத்தால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
செபிக் ஆற்றில் ஏற்கனவே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளதால், மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். மாகாண போலீஸ் தளபதி கிறிஸ்டோபர் தமாரி இது தொடர்பாக கூறுகையில், "தற்போது வரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications