சுவர் கட்டுவதாக கூறி நிதி முறைகேடு.. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்னாள் ஆலோசகர் கைது
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முன்னாள் தேர்தல் ஆலோசகர் ஸ்டீவ் பானன் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்தான் அதிபர் டிரம்பிற்கு அமெரிக்கா - மெக்சிகோ இடையே சுவர் எழுப்ப வேண்டும் என்ற ஐடியாவை கொடுத்தவர். கடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப்பின் பிரச்சாரத்தை வடிவமைத்தவர் ஸ்டீவ்தான்.
Recommended Video
அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் 2020ஐ எதிர்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்காக வாக்குறுதிகளை டிரம்ப் அள்ளி வீச தொடங்கி உள்ளார். 4 வருடங்கள் முன் நடந்த அதிபர் தேர்தலில், டிரம்ப் கொடுத்த முக்கியமான வாக்குறுதி என்றால் அது மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவது.

மெக்சிகோவில் இருந்து யாரும் சட்ட விரோதமாக அமெரிக்கா வர கூடாது, இதை தடுக்க சுவர் எழுப்ப போகிறேன் என்று டிரம்ப் வாக்குறுதி அளித்தார். இதற்கான திட்டங்களை அறிவித்த அதிபர் டிரம்ப், போதிய நிதி இல்லாத காரணத்தாலும், நாடாளுமன்ற அனுமதி இல்லாத காரணத்தாலும் மெக்சிகோ - அமெரிக்க எல்லையில் தற்போது வரை சுவர் எழுப்ப முடியவில்லை.
இந்த நிலையில் டிரம்பிற்கு இப்படி சுவர் எழுப்பும் திட்டத்தை போட்டுக்கொடுத்த, டிரம்ப்பின் முன்னாள் தேர்தல் ஆலோசகர் ஸ்டீவ் பானன் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்டீவ் மற்றும் அவர் கூட்டாளிகள் மூவர் இணைந்து "நாம் சுவரை உருவாக்குகிறோம்" (We Build The Wall) என்ற பெயரில் ஆன்லைன் நிதி திரட்டும் திட்டத்திற்கு நன்கொடை பெற்றுள்ளனர்.
அதாவது அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப நிதி கொடுங்கள் என்று கூறி இந்த ஆன்லைன் நிதி திரட்டும் பிரச்சாரத்தை அவர்கள் நடத்தி உள்ளனர். இதன் மூலம் 25 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை திரட்டியுள்ளனர். அமெரிக்காவின் தெற்கு எல்லைப்பகுதியில் மெக்சிகோ அருகே சுவர் எழுப்பும் திட்டம் என்றுகூறிதான் இந்த நிதி பெறப்பட்டுள்ளது.
நன்கொடை பணத்தில் 100% சுவர் கட்டும் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என்று ஸ்டீவ் பானன் உறுதியளித்தார், ஆனால் இந்த பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. போலி இன்வாய்ஸ் கொடுக்கப்பட்டு இந்த நிதி எங்கே போகிறது என்பது மறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த நிதியை சுவர் எழுப்பும் திட்டம் தவிர தங்கள் சொந்த பயன்பாட்டிற்கும் இவர்கள் மூவரும் பயன்படுத்தி உள்ளனர்.
தற்போது இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு போடப்பட்டடுள்ளது. இது தொடர்பாக, மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ஸ்டீவ் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டார். 2016 அதிபர் தேர்தலின்போது, பிரச்சாரத்தின் முக்கியமான இறுதி மாதங்களில் பிரச்சார வியூகங்களை வழிநடத்தியவர் ஸ்டீவ் பானன்.
ஸ்டீவ் பானன் தேசியவாத மற்றும் பழமைவாதத்தின் குரலாக ஒலித்தார். வெளிநாட்டினருக்கான பயணத் தடை மற்றும் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் முடிவு போன்றவற்றின் பின்னணியில் அவர் இருந்தார். வெள்ளை மாளிகையில் இவர் பணியாற்றி, பின் பணியில் இருந்து 2017ல் விலகினார். நேற்று கைது செய்யப்பட்ட இவர் 5 மில்லியன் டாலர் பிணையில் வெளியே வந்துள்ளார்.












Click it and Unblock the Notifications