ஹாப்பி நியூஸ், இனி மாஸ்க் அணிய தேவையில்லை.. ஆனால் இதை பண்ணி இருக்கனும்.. அமெரிக்கா முக்கிய அறிவிப்பு
வாஷிங்டன்: கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக்கொண்டவர்கள் மாஸ்க்குளை அணிய தேவையில்லை என்று அமெரிக்க நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில நாடுகளில் மீண்டும் அதிகரித்துள்ளது. மக்கள் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை மக்கள் முறையாக பின்பற்றாததும் உருமாறிய கொரோனா பரவலுமே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி மட்டுமே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணிகளை அனைத்து நாடுகளும் விரைவாக மேற்கொண்டு வருகிறது.

பைடன் வாக்குறுதி
குறிப்பாக, அமெரிக்காவில் அதிபர் பைடன் பதவியேற்ற பின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுத்துள்ளன. பல்வேறு மாகாணங்களிலும் புதிதாக தடுப்பூசி மையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், தான் பதவியேற்ற பின் 100 நாட்கள் மட்டும் பொதுமக்கள் மாஸ்க் அணிந்தால் போதும் என்றும் அதற்கு 10 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்றும் பைடன் தெரிவித்திருந்தார்.

மாஸ்க் தேவையில்லை
இந்நிலையில், அமெரிக்காவின் நோய் தடுப்பு பிரிவு தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக்கொள்ளும் நபர், உள்ளரங்குகளில் நடைபெறும் நிகழ்வுகளில் மாஸ்க் அணியாமல் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களும் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காரணம் என்ன
அதேபோல தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர் ஒருவர், கொரோனா பாதிப்பு உள்ளவருடன் தொடர்பை வைத்திருந்தார் என்றாலும் அவர் தொற்று அறிகுறிகளை வெளிப்படுத்தவில்லை என்றால் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிகள்
அமெரிக்காவில் விரைவில் பள்ளி, கல்லூரிகளை திறக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கான நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது. தற்போது வரை பைசர், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் ஆகிய மூன்று தடுப்பூசிகளின் அவரசக்கால பயன்பாட்டிற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை ஒரு டோஸ் மட்டும் அளித்தால் போதும் என்பதால் வரும் காலங்களில் இந்தத் தடுப்பூசியே அதிகம் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா கொரோனா பாதிப்பு
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 45,116 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் கொரோனா பாதிப்பு 2.97 கோடியைக் கடந்துள்ளது. அதேபோல கொரோனா உயிரிழப்பும் அமெரிக்காவில் 5.38 லட்சத்தைக் கடந்துள்ளது. உலகிலேயே கொரோனா பாதிப்பு காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது.












Click it and Unblock the Notifications