அதிகரிக்கும் இந்து வெறுப்பு குற்றங்கள்! அதிரடியாக சட்டம் கொண்டு வந்த அமெரிக்க மாகாணம்! ஏன் முக்கியம்
ஜார்ஜியா: அமெரிக்காவில் கணிசமான அளவுக்கு இந்துக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு இந்து மதத்திற்கு எதிரான Hinduphobia குற்றங்கள் அதிகரித்து வருவதாக நீண்ட காலமாகவே புகார்கள் உள்ளன. இதற்கிடையே இந்து வெறுப்பைக் குற்றமாக வகைப்படுத்தும் மசோதா ஜார்ஜியா மாகாணத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்துஃபோபியாவுக்கு எதிராக அமெரிக்காவில் உள்ள ஒரு மாகாணம் சட்டத்தைக் கொண்டு வருவது இதுவே முதல்முறையாகும்.
அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினரில் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. இதனால் அங்கு வசிக்கும் இந்துக்களின் எண்ணிக்கையும் மெல்ல அதிகரித்தே வருகிறது. அதேநேரம் அங்கு இந்து வெறுப்பு குற்றம் அதிகரித்து வருவதாகவும் அதைத் தடுக்க சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற குரல்களும் அதிகரித்துள்ளன.

இந்து மத வெறுப்பு குற்றம்
இதற்கிடையே அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் இந்து வெறுப்பு மற்றும் இந்துக்கள் மீதான வெறுப்புணர்வைக் குற்றமாக அங்கீகரிப்பதற்கான மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பிறகு ஜார்ஜியாவின் தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். அதன் பிறகு ஜார்ஜியா மாகாணத்தில் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்களுக்குத் தகுந்த தண்டனை விதிக்க முடியும்.
குடியரசுக் கட்சி சேர்ந்த ஷான் ஸ்டில் மற்றும் கிளின்ட் டிக்சன், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜேசன் எஸ்டீவ்ஸ் மற்றும் இமானுவேல் டி ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து இந்த மசோதா 375ஐ கொண்டு வந்தனர்.
இந்து வெறுப்பு
இதன்படி இந்து மதத்திற்கு எதிரான விரோதமான, அழிவுகரமான மற்றும் இழிவான அணுகுமுறைகள் "இந்து வெறுப்பு" குற்றம் (Hinduphobia) என்று வரையறுக்கிறது. அரசு மற்றும் உள்ளூர் காவல் துறையினர் இந்த வெறுப்பு குற்றங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதை இந்தச் சட்டம் கட்டாயப்படுத்துகிறது.
இது தொடர்பாக வட அமெரிக்க இந்துக்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்துக்களைப் பாதுகாக்கும் வகையில் முதல் மாகாணமாக ஜார்ஜியா இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இரு கட்சியினரும் இணைந்து இந்த மசோதாவை கொண்டு வந்ததில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த மசோதாவை கொண்டு வந்த செனட்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முதல் மாகாணம்
கடந்த 2023 ஏப்ரல் மாதம் இதே ஜார்ஜியா மாகாணத்தில் இந்து வெறுப்பு மற்றும் இந்து எதிர்ப்பு மதவெறியைக் கண்டிக்கும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே இந்து வெறுப்பைக் குற்றமாக அறிவிக்கும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 120 கோடி மக்களால் பின்பற்றப்படும் இந்து மத வெறுப்பிற்காக அமெரிக்காவில் சட்டம் கொண்டு வரப்படுவது இதுவே முதல்முறையாகும்.
இந்தியர்கள் வரவேற்பு
ஜார்ஜியாவின் மிகப்பெரிய இந்து மற்றும் இந்திய- அமெரிக்க சமூகங்களில் ஒன்றான ஃபோர்சித் கவுண்டியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் லாரன் மெக்டொனால்ட் மற்றும் டாட் ஜோன்ஸ் ஆகியோர் இந்தத் தீர்மானத்திற்குத் தலைமை தாங்கினர். இந்த தீர்மானத்திற்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஜார்ஜியா இந்துக்கள் கூட்டமைப்பின் தலைவர் ராஜீவ் மேனன் கூறுகையில், "எங்கள் எம்பிக்கள் இந்து மதத்திற்கு ஆதரவாக இருக்கிறார். நாங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது அவர் எங்களுடன் நின்றுள்ளார். இந்து வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான அவரது செயல்பாடுகளை நாங்கள் வரவேற்கிறோம்.. இதற்காக அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications