தங்கம் vs பிட்காயின்.. டிரம்ப் வெற்றியால் எதற்கு லாபம்? எதில் முதலீடு செய்தால் லாபத்தை அள்ள முடியும்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது அந்த நாட்டை தொடர்புடையது மட்டும் இல்லை.. அமெரிக்காவில் நடக்கும் விஷயங்கள், அவர்கள் எடுக்கும் பாலிசி முடிவுகள் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றுள்ள நிலையில், தங்கம் அல்லது பிட்காயின் இரண்டில் எதற்கு அதிக லாபம் கிடைக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை வீழ்த்தி அந்நாட்டின் 47ஆவது அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றுள்ளார். டிரம்பின் வெற்றி என்பது சர்வதேச அளவில் கவனிக்கத்தக்க விஷயமாக மாறுகிறது.

ஏனென்றால் உலக வல்லரசான அமெரிக்கா எடுக்கும் ஒவ்வொரு முடிவும் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அமெரிக்காவின் பாலிசிக்கள் முக்கியமானதாகும்.
தங்கம்: டிரம்ப் அதிபராகி இருக்கும் நிலையில், வரும் காலத்தில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பதே பலரது கேள்வி. கொரோனாவுக்கு பிறகு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இடையில் சில காலம் குறைந்தாலும் கூட ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது தங்கம் விலை அதிகரித்தே வருகிறது. இப்போது டிரம்ப் ஆட்சியில் தங்கம் விலை குறையுமா என்பது பலரது கேள்வி..
பிட்காயின்: வயதானவர்களுக்குத் தங்கமே பிரதான சேமிப்பு என்றால் இளைஞர்கள் ஆர்வம் காட்டுவது என்னவோ பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளில் தான். அதிபரான டிரம்ப் கிரிப்டோ கரன்சிகளுக்கு ஆதரவளிப்பேன் என்று சொன்ன ஒரு வார்த்தையே பிட் காயின் விலையை உச்சத்திற்கு எகிற வைத்துள்ளது. இதனால் வரும் காலத்தில் பிட்காயின் முதலீடு எப்படி இருக்கும் என்பது குறித்தும் இளைஞர்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.
வல்லுநர்கள் விளக்கம்: எனவே, இந்த இரண்டில் வரும் காலத்தில் எது நல்ல லாபத்தைத் தரும் என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கலாம். இதற்கான பதிலை ஜேபி மோர்கன் நிறுவனம் அளித்துள்ளது. அதாவது டிரம்ப் வெற்றியால் பிட்காயின் மற்றும் தங்கம் என இரண்டிற்குமே லாபம் இருக்கும் என்று அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது. பணவீக்க பாலிசியால் அமெரிக்க டாலர் மதிப்பு குறையும் போது தங்கம் மற்றும் பிட்காயின் போன்றவற்றில் முதலீடு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிகோலாஸ் கூறுகையில், "டிரம்ப் அதிபராகி இருக்கிறார் வரும் காலத்தில் அவர் இறக்குமதிக்குக் கூடுதல் வரி விதிக்கலாம். இத்தோடு புவிசார் அரசியல் பதட்டங்களும் சேரவே சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்படலாம்" என்றார்.
டிரம்ப் வென்றவுடன் நேற்று தங்கம் விலை குறைந்து இருந்தது. அதேநேரம் பிட்காயின் புதிய உச்சத்தைத் தொட்டது. அது இப்போது 75,000 டாலரில் வர்த்தகமாகி வருகிறது. வரும் காலத்தில் மத்திய வங்கிகள் தங்கள் இருப்புகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதனால் தங்கம் மற்றும் பிட்காயின் என இரண்டுமே அதிகரிக்கும் என வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
எச்சரிக்கை: மத்திய கிழக்கு, ரஷ்யா உக்ரைன் என்று சர்வதேச அளவில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தைத் தொடர்ந்து வாங்கி குவித்து வருகிறது. கடந்த சில காலமாகவே தங்கம் விலை அதிகரிக்க இதுவே முக்கிய காரணமாகும். சர்வதேச பதற்றம் சீராக சில காலம் எடுக்கும் என்பதால் உலக நாடுகள் தங்கத்தை வாங்குவது தொடர்ந்து அதிகரிக்கும் என்றே தெரிகிறது.
அதேநேரம் உலக முதலீட்டாளர் பாரன் பபேட் முதல் தமிழ்நாட்டின் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் வரை பலரும் கிரிப்டோ கரன்சியில் முதலீடு வேண்டாம் என்றே தொடர்ந்து எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications