கிரீன் கார்டு இருக்கா? ஆனாலும் நீங்க டிரம்ப் அதிகாரிகளால் அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படலாம்!
வாஷிங்டன்: டிரம்ப் வந்த பிறகு கிரீன் கார்டு வைத்திருப்போருக்கும் கூட பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவுகிறது. இதற்கிடையே இப்போது அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறும் முயற்சியில் இருந்த பெண் ஒருவர் திடீரென நாட்டில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளார். அங்கு என்ன நடந்தது. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்காவில் குடியேறிய பலரும் எப்படியாவது கிரீன் கார்டு வாங்கிவிட வேண்டும் என்பதையே கனவாக வைத்திருப்பார்கள். குறிப்பாக அங்கு வேலை செய்யும் இந்திய ஐடி ஊழியர்களின் அதிகபட்ச ஆசையாகவே கிரீன் கார்டு தான் இருக்கும்.

கிரீன் கார்டு
ஏனென்றால் ஒரு முறை கிரீன் கார்டு வாங்கிவிட்டால் போதும். பிறகு அடிக்கடி விசாக்களை புதுப்பிக்கத் தேவையில்லை. மேலும், பிரச்சினை இல்லாமல் எவ்வளவு காலம் வேண்டுமோ அவ்வளவு காலம் அமெரிக்காவில் தங்கலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், டிரம்ப் வந்த பிறகு அவை எல்லாம் மாறிவிட்டது. டிரம்பின் கடுமையான குடியேற்ற விதிகள் காரணமாக கிரீன் கார்டு வைத்திருப்போர் கூட பயத்தில் தான் இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் கிரீன் கார்டு அல்லது உரிய விசா வைத்திருப்போர் கூட பல சிக்கல்களை எதிர்கொள்ளும் நிகழ்வுகளை நாம் பார்த்திருக்கிறோம். இப்போதும் அப்படியொரு சம்பவம் தான் நடந்துள்ளது. அங்கு அங்கீகரிக்கப்பட்ட நிரந்தர வேலைவாய்ப்பு சான்றிதழ் வைத்திருந்த பெண் வெளிநாடு சென்றுவிட்டுத் திரும்ப முயலும் போது அவரை உள்ளே நுழைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லையாம்.
என்ன நடந்தது
இந்த அங்கீகரிக்கப்பட்ட நிரந்தர வேலைவாய்ப்பு சான்றிதழ் என்பது கிரீன் கார்டு பெற ஒரு முக்கியமான படியாகும். இதை முதலில் பெற்ற பிறகே கிரீன் கார்டுகள் கோரி விண்ணப்பிக்க முடியும். அவர் அமெரிக்க ஆளுகைக்கு உட்பட புவேர்ட்டோ ரிக்கோவில் வேலை செய்து வந்துள்ளார். அவர் அங்கீகரிக்கப்பட்ட நிரந்தர வேலைவாய்ப்பு சான்றிதழும் பெற்றுவிட்டார். அவர் வெளிநாட்டிற்குச் சென்றபோது இந்த சான்றிதழை எடுத்துச் செல்ல மறந்துவிட்டார். இது தொடர்பாக அவர் தனது கணவரிடம் தெரிவிக்கவே, அவர் அந்த சான்றிதழை போட்டோவாக எடுத்து அனுப்பியிருக்கிறார்.
சிறிய சிக்கல்
ஒரிஜினல் தான் வாங்கிவிட்டோமே.. மீண்டும் நாட்டில் நுழைய இந்த நகல் போதும் என்றே அவர் நினைத்துள்ளார். ஆனால், அமெரிக்கக் குடியுரிமை அதிகாரிகள் அந்த நகலை ஏற்கவில்லை. அவரிடம் என்ன நடந்தது என்பதைக் கூட கேட்க விரும்பாத அதிகாரிகள் அவரை அப்படியே திருப்பி அனுப்பிவிட்டனர். இது மட்டுமில்லை.. அந்த பெண் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். அதாவது உரியச் சான்றிதழ் இல்லாமல்.. அதன் நகலை மட்டும் வைத்துக்கொண்டு அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றதால், மோசடி குற்றச்சாட்டு சுமத்துகின்றனர்.
இது தொடர்பாக அவரது வழக்கறிஞர் கூறுகையில், "அவர் செய்தது சிறிய தவறு. ஆனால், அதற்காக மோசடி குற்றச்சாட்டைச் சுமத்துவது ஏற்க முடியாது. இப்போது அவர் சான்றிதழ் பெறும் செயல்முறையை மீண்டும் தொடங்க வேண்டும். அதற்குப் பல ஆண்டுகள் வரை கூட ஆகலாம். இது தேவையில்லாத மன அழுத்தத்தையே ஏற்படுத்துகிறது" என்றார்.
ரொம்ப கவனமாக இருக்கணும்
டிரம்ப் வந்த பிறகு அமெரிக்கக் குடியேற்ற முறை எவ்வளவு தூரம் மாறிவிட்டது என்பதையே இது காட்டுகிறது. அந்த பெண் ஏற்கனவே அந்த வேலை சான்றிதழைப் பெற்றே இருந்தார். ஆனால், அசல் ஆவணத்தை எடுத்துச் செல்ல தவறிய ஒரே காரணத்திற்காக அவர் மீது மோசடி புகார்களை முன்வைத்துள்ளனர். இது ஒர்க் பெர்மிட் மற்றும் க்ரீன் கார்டு வைத்திருப்போருக்கான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. அதாவது உங்கள் ஆவணங்கள் அங்கீகரிக்கப்பட்டாலும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். சிறு தவறு நடந்தாலும் நாடுகடத்தப்படலாம் என்ற நிலையே இருக்கிறது.












Click it and Unblock the Notifications