சீனாவின் உளவு பலூன் நினைவிருக்கா.. அமெரிக்காவில் "அது" செய்த பெரிய சம்பவம்.. அதிரும் அதிபர் பைடன்
வாஷிங்டன்: இந்தாண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா மீது சீன பலூன் ஒன்று பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
இந்தாண்டு தொடக்கத்தில் நமக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சர்வதேச நிகழ்வு என்றால் அது அமெரிக்கா வானில் பறந்த சீனாவின் ஸ்பை பலூன் தான். இதை சில நாட்கள் ஆய்வு செய்து பிறகு அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.

சீனா இது வானிலை குறித்து ஆய்வு செய்யும் பலூன் என்றும் வழி மாறி அமெரிக்கா வான்வழியில் நுழைந்துவிட்டதாகவும் கூறியது. இருப்பினும், சீனா சொன்னதை நம்ப யாருமே தயாராக இல்லை.
சீன உளவு பலூன்: கடந்தாண்டு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்தது. அப்போது அமெரிக்க அமைச்சர் ஒருவர் சீனா செல்லவிருந்த நிலையில், இந்த நிகழ்வால் அந்த பயணமும் தடைப்பட்டது. இதற்கிடையே இந்த சீன பலூன் குறித்து இப்போது சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவைக் கடந்து சென்ற இந்த சீன உளவு பலூன், நேவிகேஷன் மற்றும் இருப்பிடம் தொடர்பான தகவல்களைத் தொடர்ச்சியாகச் சீனாவுக்கு அனுப்பியுள்ளது. அதிலும் அமெரிக்க நிறுவனத்தின் இணையச் சேவையையே பயன்படுத்தியே சீன உளவு நிறுவனம் அந்த தகவல்களை அனுப்பியுள்ளது. இது குறித்து அமெரிக்க புலனாய்வுத் துறை விசாரித்து வரும் நிலையில், அவர்கள் தான் இந்தத் தகவல்களை இப்போது பகிர்ந்துள்ளனர்.
அமெரிக்க இணையம்: அதாவது பலூனின் இருப்பிடத்தைக் கண்காணிக்கவும், அது செல்லும் பாதையை டிராக் செய்யவும் அமெரிக்க இணையத்தையே பயன்படுத்தியுள்ளது தான் இங்கே நகைமுரண். எந்த அமெரிக்க நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்தினார்கள் என்பது புலனாய்வு அமைப்புகள் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இருப்பினும், அமெரிக்காவைக் கடக்கும் போது சீனாவை அந்த பலூன் தொடர்பு கொண்டுள்ளதை மட்டும் அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
இது குறித்து அமெரிக்க புலனாய்வுத் துறை கூறுகையில், "உளவுத் தகவல்களைச் சீனாவுக்கு அனுப்ப நெட்வொர்க் இணைப்பை அது பயன்படுத்தியுள்ளது. பல தகவல்களை அனுப்பி இருந்த போதிலும், சில தகவல்கள் பலூனில் தான் இருந்தது. நாங்கள் அந்த பலூனை சுட்டு வீழ்த்திய நிலையில், அதில் இருந்த முக்கிய தகவல்களை எங்களால் சேகரிக்க முடிந்தது. இதன் மூலம் எங்களால் பலூனை விரிவாக ஆய்வு செய்ய முடிந்தது" என்றார்.
உளவு துறை தகவல்: அதேநேரம் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ மற்றும் என்ஏஐ அதிகாரிகள் இது குறித்து வெளிப்படையாகக் கருத்து கூற மறுத்துவிட்டனர். அமெரிக்காவில் உள்ள சீன தூதரகத்திடம் இது குறித்துக் கேட்ட போது, அது முன்பு கூறியதை போலவே வானிலை குறித்த ஆய்வு பலூன் என்ற கூறி இருக்கிறது.
அமெரிக்கா இதை ஏற்கவில்லை. உளவு பலூன் சீன ராணுவத்தால் திட்டமிடப்பட்ட ஒரு விரிவான கண்காணிப்பு திட்டத்தின் ஒரு பகுதி என்று அமெரிக்கா ஊடகங்கள் கூறுகின்றனர். சமீபத்திய ஆண்டுகளில் மட்டும் சீனா இதுபோல ஐந்து கண்டங்களில் 10+ பலூன்களை அனுப்பியுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது.
கடந்த ஜூன் மாதம், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கூட இது குறித்துக் கூறியிருந்தார்.. பைடன் கூறுகையில், "சீன அதிபர் ஜி ஜின்பிங் பலூன் அமெரிக்க வான்வழியில் சிக்கிக் கொண்டது என்பதை அறிந்ததும் வருத்தமடைந்தார், அதை நாங்கள் சுட்டு வீழ்த்திய செய்தியைக் கேட்டு அவர் பதறியதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது" என்றார்.












Click it and Unblock the Notifications