"பூமியில் ஒரு நாள்.." அன்று 19 மணி நேரம்! இன்று 24 மணி நேரம்! திடீரென 5 மணி நேரம் அதிகரித்தது எப்படி
வாஷிங்டன்: பூமியின் சுழற்சி என்பது தொடர்ந்து நீண்டு கொண்டே வருகிறதாம். அதற்கு என்ன காலம் வரும் காலத்தில் பூமியின் சுழற்சி எப்படி இருக்கும் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
பூமி தன்னை தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவது அனைவருக்கும் தெரியும். பூமி தன்னை தானே சுற்றிக் கொள்வதே நமக்கு ஒரு நாள் ஆகிறது. இப்படி பூமி தன்னை தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.

ஆனால், கடந்த காலங்களில் எப்போதும் இதுபோல பூமி தன்னை தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரத்தை எடுத்துக் கொண்டது இல்லை. முந்தைய காலங்களில் பூமியில் ஒரு நாள் என்பது மாறுபட்டு இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் பூமியில் ஒரு நாள் என்பது 19 மணி நேரமாக இருந்துள்ளது.
19 மணி நேரம்: இது தற்போதைய 24 மணிநேர சுழற்சிக்கு முற்றிலும் மாறுபட்டதாகவே இருக்கிறது. கிரகங்கள் அதன் சொந்த அச்சில் சுழல்வதை வைத்தே ஒரு நாள் என்பது தீர்மானிக்கப்படுகிறது. "போரிங் பில்லியன்" என்று அழைக்கப்படும் காலகட்டத்தில் தான் பூமியில் ஒரு நாள் என்பது குறைந்துள்ளது. டெக்டோனிக் செயல்பாடுகள் குறைந்ததும் ஈர்ப்பு விசைகளின் நுட்பமான சமநிலையுமே இதற்குக் காரணமாகும்.
இந்த காலத்தில் பூமியில் ஒரு நாள் என்பது 19 மணி நேரமாக இருந்துள்ளது. சுமார் ஒரு பில்லியன் ஆண்டுகள் இப்படியே இருந்துள்ளது. இந்த நேரத்தில் தான் உயிரியல் பரிணாம வளர்ச்சியும் அப்படியே ஸ்தம்பித்துவிட்டதாம். எனவே, இந்த காலகட்டத்தை ஆய்வாளர்கள் "போரிங் பில்லியன்" எனக் குறிப்பிடுகிறார்கள். இது குறித்த ஆய்வு முடிவுகள் நேச்சர் ஜியோசயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
வலுவான ஈர்ப்பு விசை: அந்த காலகட்டத்தில் சந்திரன் இப்போது இருப்பதைக் காட்டிலும் அருகில் இருந்துள்ளது. இதனால் பூமியில் ஏற்பட்ட நிகழ்வுகளுக்கு நிலவும் முக்கிய காரணமாக இருந்துள்ளது. பூமிக்கு மிக அருகில் இருப்பதால் சந்திரன் வலுவான ஈர்ப்பு விசையை செலுத்தியுள்ளது. அதன் பின்னர் காலப்போக்கில் தான், சந்திரன் படிப்படியாகப் பூமியின் அருகில் இருந்து தள்ளிச் சென்று, வேறு ஒரு சுற்றுப்பாதையில் செல்ல ஆரம்பித்துள்ளது.
நமக்குத் தெரியாமலேயே பூமியின் நாட்களைச் சந்திரன் படிப்படியாக நீட்டித்து வருவதாக ஆய்வாளர்கள் இதற்கு முன்னரே கூறியிருந்தனர். பூமியின் செயல்பாடுகள், அதன் அச்சு சாய்வு உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் காலநிலை மாற்றங்களைப் பதிவு செய்யும் சைக்ளோஸ்ட்ராடிகிராஃபி தரவைப் பயன்படுத்திக் கடந்த காலங்களில் என்ன நடந்திருக்கும் என்பதை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
ஸ்னோபால் எர்த் ஃபேஸ்: அதன் பிறகு ஏற்பட்ட காலத்தை "ஸ்னோபால் எர்த் ஃபேஸ்" என்கிறார்கள். இந்த காலகட்டத்தில் தான், ஆக்ஸிஜன் அளவு உயர்ந்து, ஓசோன் படலம் உருவானது. இதனை ஆய்வாளர்கள் மிகப் பெரும் ஆக்சிஜனேற்ற நிகழ்வு (Great Oxidation Event) என்கிறார்கள்.
ஓசோன் படலத்திற்கு நீராவியை விட அதிக சூரிய ஒளியை உறிஞ்சும் திறன் இருப்பதால், வளிமண்டல அலைகளை அது விரைவுபடுத்துகிறது. இந்த நிகழ்வு தான், அப்போது அதிகரித்த சூரிய ஒளியுடன் சேர்ந்து, அருகிலுள்ள நிலவின் ஈர்ப்பு விசையை சமப்படுத்தியது. மேலும், பூமியின் சுழற்சியை உறுதிப்படுத்தியது. இந்த காலகட்டத்தில் அதிக சூரிய ஒளி ஓசோன் படலத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது ஒளிச்சேர்க்கை பாக்டீரியாவின் செயல்பாட்டை அதிகரித்துள்ளது. இதுவே பரிணாம வளர்ச்சிக்குச் சாதகமான நிலைமை உருவாக்கியுள்ளது.
பூமியின் இயக்கம் மற்றும் சுழற்சி சந்திரன் மட்டுமல்ல, பிற கிரகங்கள் உட்பட பல்வேறு வானியல் காரணங்களால் பாதிக்கப்படுகிறது. இவையும் பூமியின் சுழற்சியில் முக்கிய பங்கை வகிக்கிறது. இவை எல்லாம் சேர்ந்து தான் பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரமாக ஆக்கயுள்ளது. இப்போதும் கூட பூமியில் ஒவ்வொரு ஆண்டும் 0.000015 வினாடிகள் நீடிக்கிறதாம்.












Click it and Unblock the Notifications