இந்திய தம்பதி பலி.. பால்கனியில் அழுது கொண்டிருந்த 4 வயது மகள்!.. அமெரிக்காவில் அதிர்ச்சி!
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள வீட்டில் இந்திய வம்சாவளி தம்பதி கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியின் 4 வயது மகள் பால்கனியில் அழுது கொண்டிருந்த நிலையில் இந்த சம்பவம் அக்கம்பக்கத்தினர் கண்டறிந்து போலீஸுக்கு தகவல் அளித்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டம் அம்பஜோகையைச் சேர்ந்தவர் பாலாஜி ருத்ரவார் (32). இவரது மனைவி ஆர்த்தி பாலாஜி (30). இவர்களது 4 வயதில் மகள் உள்ளார்.
பணத்துக்காக நடுரோட்டிலேயே காரை நிறுத்தி.. கணவனை உயிரோடு எரித்து.. திகைத்துப் போன திருப்பூர்
இவர்களுக்கு 2014 ஆம் ஆண்டு திருமணம் ஆனநிலையில் இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் குடிபெயர்ந்தனர். பாலாஜி அமெரிக்காவில் உள்ள இந்தியன் இன்போடெக் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவரது மனைவி இல்லத்தரசியாக இருந்தார்.
அக்கம்பக்கத்தினர்
இருவரும் நியூஜெர்சியில் சுமார் 15 ஆயிரம் பேர் வசிக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை பால்கனியில் பாலாஜியின் மகள் நீண்ட நேரமாக அழுது கொண்டிருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர், பாலாஜியின் வீட்டிற்கு சென்று பார்த்தனர்.
கத்திக் குத்து
அப்போது கணவன், மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீஸாரிடம் தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், விசாரணையில் இருவரும் கத்திக் குத்தால் இறந்தது தெரியவந்தது. ஆர்த்திக்கு வயிற்றில் கத்திக் குத்து ஏற்பட்டுள்ளது.
காரணம் என்ன
இருவருக்கும் இடையே நடந்த குடும்பத் தகராறில் ஒருவரையொருவர் கத்தியால் குத்தி இறந்திருக்கலாம் என தெரிகிறது. இல்லாவிட்டால் குடும்பச் சண்டையில் ஆர்த்தியை கத்தியால் குத்திவிட்டு பாலாஜி தன்னை தானே கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றும் தெரிகிறது. இருவரது பிரேத பரிசோதனை முடிவுகள் வந்தால் மட்டுமே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.
மகனின் நண்பர் வீட்டில் குழந்தை
இதுகுறித்து பாலாஜியின் தந்தை கூறுகையில் என் மருமகள் 7 மாத கர்ப்பிணியாக இருந்த போது நாங்கள் அமெரிக்காவில் உள்ள அவர்களது வீட்டில் தங்கியிருந்தோம். தற்போது மீண்டும் என் மகன், மருமகளுடன் சென்று தங்கியிருக்கலாம் என நினைத்திருந்த நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது. எங்களது பேத்தி என் மகனின் நண்பர் வீட்டில் இருக்கிறாள்.
60 சதவீதம் பேர் இந்தியர்கள்
நியூ ஜெர்சியில் உள்ள மக்கள்தொகையில் 60 சதவீதம் பேர் இந்தியர்கள். என் மகனுக்கு ஏராளமான நண்பர்கள் உள்ளனர். இருவரது உடல்களும் இந்தியாவுக்கு வர 8 முதல் 10 நாட்கள் ஆகும் என அமெரிக்க போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தியதாக பாலாஜியின் தந்தை தெரிவித்துள்ளார்.