கிளர்ச்சி சட்டத்தை கையில் எடுக்கும் டிரம்ப்? அடுத்த வாரமே அமெரிக்க மண்ணில் களமிறக்கப்படும் ராணுவம்!
வாஷிங்டன்: அதிபர் டிரம்ப் வரும் ஏப்ரல் 20ம் தேதி அமெரிக்காவில் ராணுவ சட்டத்திற்கு இணையான ஒரு சட்டத்தை அறிவிக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. 5 நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில் டிரம்ப் உத்தரவு அமெரிக்காவின் சிவில் உரிமைகளைப் பாதிக்குமோ என அஞ்சப்படுகிறது. டிரம்ப் அமல்படுத்தப் போகும் புதிய சட்டம் என்ன.. அது யாரைப் பாதிக்கும் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி 20ம் தேதி பதவியேற்ற போது, அவர் பல்வேறு நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அப்படி டிரம்ப் முதல் நாளில் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவுகளில் ஒன்று அமெரிக்காவின் தெற்கு எல்லையில் தேசிய அவசரநிலை அறிவிப்பது. அமெரிக்காவின் தெற்கு எல்லையான மெக்சிகோ அருகே சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுக்கும் வகையில் அவர் தேசிய எமர்ஜென்சி நிலையை அறிவித்தார்.

கிளர்ச்சி சட்டம்
அவரது அந்த நிர்வாக உத்தரவில் குறிப்பிட்ட ஒரு பாயிண்ட் இருந்தது. அதாவது, நிர்வாக உத்தரவு கையெழுத்தாகி 90 நாட்களில் டிரம்ப் நிர்வாகம் தேவைப்பட்டால் 1807 கிளர்ச்சிச் சட்டத்தைப் பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. ஒருவேளை அந்தக் கிளர்ச்சி சட்டம் பயன்படுத்தப்பட்டால் அமெரிக்க மண்ணில் ராணுவத்தைக் களமிறக்கும் அதிகாரம் டிரம்ப்பிற்கு வரும். அந்த 90 நாள் காலம் வரும் ஏப்ரல் 20ம் தேதியுடன் நிறைவடைவதால் டிரம்பின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முக்கியமான பாயிண்டு
கடந்த ஜனவரி 20ம் தேதி டிரம்ப் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவில், "தெற்கு எல்லையில் தேசிய அவசரநிலை அமல்படுத்தப்பட்டு 90 நாட்களுக்குள், அமெரிக்காவின் தெற்கு எல்லையில் உள்ள நிலைமை குறித்தும், அங்கு 1807 கிளர்ச்சிச் சட்டத்தைச் செயல்படுத்தலாமா வேண்டாமா என்பது குறித்தும் பாதுகாப்புச் செயலாளரும் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளரும் விரிவான ரிப்போர்ட்டை அதிபருக்கு அளிப்பார்கள். தெற்கு எல்லையைக் கட்டுப்படுத்த என்ன கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது தொடர்பான கூட்டு அறிக்கையாக அது இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளர்ச்சி சட்டம் 1807 என்றால் என்ன
சில குறிப்பிட்ட சூழல்களில் சட்ட ஒழுங்கை உறுதி செய்ய அமெரிக்க ராணுவத்தையும் அமெரிக்கத் தேசியக் காவல்படையையும் அமெரிக்க மண்ணில் களமிறக்க 1807ஆம் ஆண்டு கிளர்ச்சிச் சட்டம் அதிபருக்கு அதிகாரம் அளிக்கிறது. எந்தவொரு கிளர்ச்சி, அல்லது குடிமக்களால் செய்யப்படும் வன்முறை அல்லது எதிர்ப்பை முற்றிலுமாக அடக்க ராணுவத்திற்கு இந்தச் சட்டம் அதிகாரம் தருகிறது.
அமெரிக்காவில் பொதுவாகவே எல்லா நேரங்களிலும் போஸ் கொமிடேட்டஸ் சட்டம் அமலில் இருக்கும். போஸ் கொமிட்டோஸ் சட்டம் உள்ளூர் சட்ட ஒழுங்கைப் பராமரிப்பது மற்றும் சட்ட அமலாக்கத் துறையில் ராணுவம் தலையிடுவதை இந்தச் சட்டம் முழுமையாகத் தடை செய்கிறது. ஆனால், கிளர்ச்சிச் சட்டம் அதை மீறுவதாக இருக்கிறது. இந்தச் சட்டம் அமெரிக்க ஆயுதப்படைகளின் தளபதியான அமெரிக்க அதிபருக்கு அந்நாட்டு ராணுவத்தை நாட்டில் எந்தப் பகுதியில் எப்போது களமிறக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் முழுமையான அதிகாரங்களை வழங்குகிறது.
கிளர்ச்சி சட்டம் & ராணுவ சட்டம் வேறுபாடு?
அதேநேரம் இதை முழுமையாக ராணுவ ஆட்சியை அமல்படுத்தக் கொண்டு வரப்படும் ராணுவ சட்டம் எனச் சொல்ல முடியாது. ராணுவச் சட்டம் என்பது அனைத்து மாகாண விவகாரங்களிலும் முழுமையான கட்டுப்பாட்டை ராணுவ ஜெனரலுக்கு (அமெரிக்காவில் அதிபர் தான் ராணுவ ஜெனரல்) வழங்கும். அதேநேரம் கிளர்ச்சி சட்டம் என்பது உள்ளூர் அரசு மற்றும் நிர்வாகத்தின் அதிகாரங்களைப் பறிக்காது. அதேநேரம் சட்டம் ஒழுங்கை அமல்படுத்த ராணுவத்தைப் பயன்படுத்தும் அதிகாரத்தை அதிபருக்கு அளிக்கிறது.
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் ராணுவச் சட்டம் எமர்ஜென்சி காலத்தில் அரசு மற்றும் உள்ளூர் அமைப்புகளின் அதிகாரத்தை ராணுவம் எடுத்துக் கொள்ளும். மறுபுறம் கிளர்ச்சிச் சட்டம் என்பது உள்ளூர் அமைப்புகளுக்கு ராணுவம் உதவ மட்டுமே அனுமதிக்கிறது. இருப்பினும், டிரம்ப் இந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்றும் ராணுவம் மூலம் தேவையற்ற நடவடிக்கையை எடுக்கக்கூடும் என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications