கிரீன் கார்டு இருந்தாலும்.. அமெரிக்காவில் நிரந்தரமாக தங்க முடியாது! சர்ச்சையை கிளப்பிய துணை அதிபர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் பெரும்பாலான இந்தியர்களுக்கு கிரீன் கார்டு வாங்க வேண்டும் என்பதே நோக்கமாக இருக்கும். விசாவை வைத்திருந்தால் அது காலாவதி ஆன உடனேயே அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டும். ஆனால், கிரீன் கார்டுக்கு அந்த சிக்கல் இல்லை என்பதாலேயே பலரும் கிரீன் கார்டு பெற முயல்கிறார்கள். இதற்கிடையே கிரீன் கார்டு வைத்திருந்தாலும் ஒருவரால் நிரந்தரமாக அமெரிக்காவில் தங்க முடியாது எனக் கூறி அமெரிக்கத் துணை அதிபர் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் தொடர்ச்சியாக பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக வருவோரால் தான் நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கிறது எனக் குறிப்பிடும் டிரம்ப், இதற்காகத் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சட்ட விரோத குடியேற்றத்தைத் தடுக்கும் அதேநேரம் அவர் சட்டப்பூர்வ குடியேற்றத்தையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.

கிரீன் கார்டு
இது ஒரு பக்கம் இருக்க சில வாரங்களுக்கு முன்பு டிரம்ப், கோல்டன் கார்டு என்ற ஒரு திட்டத்தை அறிவித்தார். அமெரிக்காவில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து அமெரிக்க ஊழியர்களுக்கு வேலை தருவோருக்கு இந்த கோல்டன் கார்டு வழங்கப்படும். பணக்கார வெளிநாட்டினருக்கு ஈஸியாக குடியுரிமை பெற உதவுவதே இந்தத் திட்டமாகும். இதைப் பலரும் கடுமையாக விமர்சித்து வந்த சூழலில், அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அமெரிக்காவின் கிரீன் கார்டு குறித்துக் கூறியுள்ள சில கருத்துகள் சர்ச்சையாகியுள்ளது.
கிரீன் கார்டு எனப்படும் நிரந்தர வசிப்பு அட்டைகள், வெளிநாட்டினருக்கு அமெரிக்காவில் தங்கி, வேலை செய்யும் உரிமையை வழங்குகின்றன. அதேநேரம் கிரீன் கார்டு வைத்திருப்பதும் குடியுரிமை வைத்திருப்பதும் ஒன்று இல்லை. அமெரிக்கக் குடிமகனுக்குக் கிடைக்கும் முழு உரிமைகளும் சலுகைகளும் கிரீன் கார்டு வைத்திருப்போருக்கு கிடையாது.
நிரந்தரமாகத் தங்க முடியாது
ஒரு முறை கிரீன் கார்டு வாங்கிவிட்டால் போதும் பிறகு நிரந்தரமாக அமெரிக்காவில் வசிக்கலாம்.. மற்ற விசாக்களை போலக் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் உள்ளிட்ட கண்டிஷன்கள் எதுவும் இல்லை.. இதற்கிடையே கிரீன் கார்டு வைத்திருந்தாலும் அது நிரந்தரம் இல்லை என்பது போல அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது
இது தொடர்பாக அவர் அமெரிக்க ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "ஒருவர் கிரீன் கார்டு வைத்திருக்கிறார் என்றாலும் அவருக்கு அமெரிக்காவில் இருக்கக் காலவரையற்ற உரிமை இல்லை.. இது பேச்சு சுதந்திரம் பற்றியது இல்லை.. ஆனால் தேசியப் பாதுகாப்பைப் பற்றியது.. மிக முக்கியமாக, அமெரிக்க மக்களாகிய நாம் நமது சமூகத்தில் யாரைச் சேர்க்க முடிவு செய்கிறோம் என்பது பற்றியது" என்றார்.
சட்டம் சொல்வது என்ன
சட்டப்படி ஒருவர் ஒரு முறை கிரீன் கார்டு வாங்கிவிட்டால் அதைப் புதுப்பிக்கத் தேவையில்லை.. இருப்பினும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது, நீண்ட காலம் அமெரிக்காவிற்கு வராமல் இருப்பது, குடியேற்ற விதிமுறைகளைப் பின்பற்றத் தவறுவது உள்ளிட்ட சில காரணங்களுக்காக ஒருவருக்கு வழங்கப்பட்ட கிரீன் கார்டை ரத்து செய்ய அமெரிக்க அரசுக்கு உரிமை இருக்கிறது.
கோல்டன் விசா
கிரீன் கார்டுக்கு மாற்றாகவே டிரம்ப் கோல்டன் விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார். இதன் மூலம் ஒருவர் 5 மில்லின் டாலர் (அதாவது இந்திய மதிப்பில் ரூ.42 கோடி) கொடுத்தாலே கோல்டன் கார்டு விசா வழங்கப்படும். அதை வைத்து ஒருவர் அமெரிக்காவில் நிரந்தரமாக இருக்கலாம்.
இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்த போது டிரம்ப், "தகுதி வாய்ந்த ஊழியர்களை தங்கள் நிறுவனத்தில் பணியமர்த்தும் ஒரு வாய்ப்பை இந்த கோல்டன் விசா வழங்குகிறது.. ஒரு நிறுவனம் தனக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு கோல்டன் விசா வாங்கலாம். ஒரு கோல்டன் விசாவுக்கு 5 மில்லியன் கட்டணம் செலுத்த வேண்டும். அதில் குறிப்பிட்ட ஒரு பகுதியை தேசிய கடனை அடைக்க பயன்படுத்துவோம்" என்றார்.












Click it and Unblock the Notifications