போராட்டம்.. கலவரம்! டிரம்பிற்கு எதிராக திரண்ட பல ஆயிரம் பேர்.. ராணுவம் வந்தும் கட்டுப்படுத்த முடியல
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப் பெரிய போராட்டம் வெடித்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிராக அங்குப் பல ஆயிரம் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களைக் கட்டுப்படுத்த ராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளதால் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்தே வருகிறது.
அமெரிக்க அதிபரான டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாகச் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக அவரது நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டுபிடித்து, அவர்களை வெளியேற்றும் பணிகள் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது.

டிரம்ப் அதிகாரிகள்
அதன்படி டிரம்ப் அதிகாரிகள் சமீபத்தில் கலிபோர்னியாவில் ரெய்டு நடத்தினர். அங்கு மாகாணம் முழுக்க சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் கண்டுபிடித்து கைது நடவடிக்கை எடுத்தனர். இருப்பினும், இதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பலரும் போராட்டம் நடத்தியதால் பாதுகாப்பிற்காகத் தேசியப் பாதுகாப்புப் படை அனுப்பப்பட்டது.
ஆனால், தேசியப் பாதுகாப்பு படைக்கு எதிராகவும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பல ஆயிரம் மக்கள் போராட்டத்தில் இறங்கியதால் நிலைமை மிகவும் பதற்றமாக இருந்தது. முக்கிய நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், வாகனங்களுக்கு தீ வைத்தனர். நிலைமை கையை மீறிச் செல்லாமல் இருக்க உள்ளூர் அதிகாரிகள் ரப்பர் குண்டுகள் மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்திக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.
ராணுவம் வந்தும் கட்டுப்படுத்த முடியவில்லை
டிரம்ப் நிர்வாகத்தினர் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் ரெய்டு நடத்தி வருகிறார்கள். சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கைது செய்து வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குக் கடந்த 3 நாட்களாகவே இது தொடர்பாகப் பெரியளவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. அவர்களைக் கட்டுப்படுத்த கடந்த இரு நாட்களாகவே அங்குத் தேசியப் பாதுகாப்புப் படை வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
கலவரம்
ரெய்டில் கைது செய்யப்பட்டோர் லாஸ் ஏஞ்சல்ஸ் சிட்டி சென்டரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கும் போராட்டம் நடந்தது. தேசியப் பாதுகாப்புப் படையினர் திரும்பப் போக வேண்டும்.. அவர்களின் நடவடிக்கை வெட்கக்கேடானது என்றெல்லாம் பொதுமக்கள் கோஷமிட்டனர். சில போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படை வீரர்களை நெருங்கிய நிலையில், கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. அப்போது தான் அங்குக் கலவர சூழல் ஏற்பட்டது. இதனால் அங்குப் பதற்றம் மேலும் அதிகரித்தது.
டிரம்பிற்கு கடிதம்
இதற்கிடையே கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசம் நேற்றைய தினம் அதிபர் டிரம்பிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் தேசியப் பாதுகாப்புப் படையின் இருப்பதால் நகரத்தில் தேவையில்லாத பதற்றம் ஏற்படுவதாகவும் இதனால் பாதுகாப்புப் படை வீரர்களைத் திரும்பப் பெறுமாறு டிரம்பை கேட்டுக்கொண்டார். மேலும், டிரம்ப் அரசின் நடவடிக்கை கலிபோர்னியா மாகாண இறையாண்மையின் மீதான தாக்குதல் என்றும் விமர்சித்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் கரேன் பாஸும் டிரம்பையே விமர்சித்தார். டிரம்ப் நிர்வாகம் ஏற்படுத்திய குழப்பம் காரணமாகவே இந்த போராட்டம் வெடித்துள்ளதாக அவர் சாடினார்.
இருப்பினும், டிரம்ப் நிர்வாகம் தேசியப் பாதுகாப்புப் படையை வாபஸ் பெற மறுத்துவிட்டது. கலிபோர்னியா அரசு சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த தவறியதால் தேசியப் பாதுகாப்புப் படை அவசியம் என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். டிரம்பிற்கு எதிரான போராட்டங்களும் அங்குத் தீவிரமடைந்து வருவதால் ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications