6 மணி நேரத்திற்கும் மேலாக பயங்கரமாக குலுங்கிய செவ்வாய்.. என்ன நடந்தது? சொல்லப்படும் ஷாக் காரணங்கள்
வாஷிங்டன்: செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சி நடந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு 6 மணி நேரத்திற்கும் மேலாக பயங்கரமாக செவ்வாய் கிரகம் குலுங்கியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட நடுக்கம் எப்படி நிகழ்ந்து என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் விண்வெளி ஆய்வில் முன்னிலை வகிக்கிறது. நாம் வாழும் இந்த பூமி எப்படி உருவானது. பூமியை போல உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் வேறு ஏதேனும் கோள்களில் இருக்கிறதா? என்பதை கண்டறிய விஞ்ஞானிகள் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குறிப்பாக பூமியின் ஒரே துணைக்கோளான நிலவு குறித்த ஆராய்ச்சியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல், சூரிய குடும்பத்தில் நான்காவது உள்ள கோளான செவ்வாய் கிரகத்திலும் ஆய்வுகள் நடக்கின்றன. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய ரோவர் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்தி வருகிறது.
குலுங்கிய செவ்வாய் கிரகம்: சூரிய குடும்பத்தில் இருக்கும் பிற கோள்களை விட செவ்வாய் கிரகம் தான் மனிதன் வாழ்வதற்கு உகந்த இடமாக இருக்கலாம் என்றும் அதனால் மனித குடியேற்றம் அடுத்து செவ்வாய் கிரகத்தில் தான் அமையும் என்பது விஞ்ஞானிகளின் வாதமாக உள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். இதன் காரணமாக செவ்வாய் கிரகத்தில் நடைபெறும் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மிகவும் கவனம் பெறுகிறது.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருக்கும் இரும்பு ஆக்சைடு காரணமாக இந்தக் கோள் செந்நிறத்தில் காட்சி அளிக்கிறது. செவ்வாய் கிரகத்தில் பூமியில் உள்ளது போன்ற எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள் ஆகியவை இருப்பதாக விஞ்ஞானிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ சாத்தியமா? என தீவிர ஆய்வு நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி அங்கு மிகப்பெரிய அளவில் நடுக்கம் (marsquake) ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
6 மணி நேரம்: ஜியோபிஷிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் ஜர்னல் என்ற ஆய்வு இதழில் இது குறித்த தகவல் இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட இந்த செவ்வாய் நடுக்கம் சுமார் 6 மணி நேரம் வரை நீடித்ததாகவும் S1222a, என்று சொல்லப்படும் இந்த நடுக்கமானது 4.7 என்ற அளவில் பதிவானதாகவும் கூறப்பட்டுள்ளது. முதலில் இந்த நடுக்கத்திற்கு செவ்வாய் கிரகத்தின் மீது ராட்சத விண்கல் எதுவும் மோதியிருக்கலாம் என்றும் அதனால் இந்த கடுமையான நடுக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூட விஞ்ஞானிகள் தரப்பில் நினைத்து இருக்கிறார்கள்.
காரணம் என்ன?: ஆனால், செவ்வாய் கிரகத்தின் 114.8 மில்லியன் சதுர கி.மீட்டர் பரப்பளவில் விண்கல் விழுந்ததற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை என்றும் இதனால், நடுக்கம் ஏற்பட்டதற்கு விண்கல் காரணம் இல்லை என்றும் பெஞ்சமின் பெர்னாண்டோ என்ற ஆய்வாளர் தலைமையிலான ஆய்வுக் குழு தனது ஆய்வறிக்கை முடிவில் கூறியுள்ளது.
டெக்டானிக் தட்டுகள்: விண்கல் மட்டும் இன்றி வானில் இருந்து வேறு எந்த ஒரு புற காரணங்கள் இந்த நடுக்கத்திற்கு காரணமாக அமையவில்லை எனவும் செவ்வாயில் உள்ள டெக்டானிக் தட்டுகளின் அழுத்தம் காரணமாக இந்த ராட்சத நடுக்கம் ஏற்பட்டு செவ்வாய் குலுங்கியிருக்க வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனாலும் செவ்வாய் கிரகத்தில் டெக்டானிக் தட்டுகள் நகரும் படியாக செயல்பாட்டில் இல்லை எனவும் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்த கடுமையான அழுத்தம் காரணமாக இந்த நடுக்கம் ஏற்பட்டு இருக்காலாம் என பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
முழுமையான ஒரு இறுதி முடிவுக்கு இதில் வரமுடியவில்லை எனவும் தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருவதாகவும் பெர்னாண்டோ தலைமையிலான ஆய்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பல்வேறு நடுகளின் விண்வெளி முகமைகள் நடத்திய செவ்வாய் கிரகத்தின் ஆராய்ச்சி தகவல்களை கொண்டு இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications